News

கொவிட் தடுப்பூசி இறக்குமதியில் அரசாங்கத்துக்கு 10 ஆயிரம் மில்லியன் ரூபா நட்டம்

By In

க.பிரசன்னா

உலகளவில் இன்னும் கொவிட் தொற்றின் அச்சம் முற்றாக நீங்கவில்லை. தற்போது பிரித்தானியாவில் கொவிட் தொற்றின் புதிய வகை அடையாளம் காணப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு இறுதியில் இலங்கையில் கொவிட் தொற்று அவசர நிலையாக உருவாக்கப்பட்டாலும் 2021 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் கொவிட் தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான திட்டங்களை அரசாங்கம் முன்வைத்தது. இவற்றில் பிரதானமானது, தேசிய கொவிட் தடுப்பூசித் திட்டமாகும். எனினும் தேசிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் இலங்கைக்கு 10,164.16 மில்லியன் ரூபா (1016.41 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.

கொவிட் தடுப்புத் திட்டங்களுக்காக வெளிநாட்டு நிறுவனங்களுடன் 10,781 கோடி ரூபா பெறுமதியான ஒப்பந்தங்களையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கமானது 42,829,630 டோஸ் தடுப்பூசிகளை (19.09.2022 ஆம் திகதி வரை) இறக்குமதி செய்துள்ளது. இதற்காக 327,156,003 அமெரிக்க டொலர்கள் (2021 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பின் சராசரி 198.41 ரூபாவாகும். அதனடிப்படையில் சுமார் 64,911.02 மில்லியன் ரூபா) செலவு செய்துள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியுடன் 40 மில்லியன் அ.டொலர்கள் பெறுமதியான பைசர் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையை எதிர்கொண்டிருந்த நிலையில் சுகாதார அமைச்சினால் அதன் காலாவதி திகதியை நீடிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இதன்படி உற்பத்தி திகதியிலிருந்து 6, 9 மற்றும் 12 மாதங்கள் வரை அதன் காலாவதி திகதி பைசர் நிறுவனத்தால் நீடிப்புச் செய்யப்பட்டன. காலாவதியாகும் நிலையிலிருந்த 6 மில்லியன் அ.டொலர் பெறுமதியான பைசர் தடுப்பூசிகளை மியன்மாருக்கு நன்கொடையாக வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கையெடுத்த போதும் அது வெற்றியளிக்கவில்லை.

இதேவேளை தற்போது பெல்ஜியம் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 7.5 மில்லியன் டோஸ் பைசர் தடுப்பூசிகள் காலாவதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன் பெறுமதி 50,625,000 அ.டொலர்களாகும். இதன்மூலம் 10,044.50 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் சீனாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 1.7 மில்லியன் சினோபோர்ம் தடுப்பூசிகள் 23.08.2023 ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன் பெறுமதி 14,263,000 அ.டொலர்களாகும். இதன்மூலம்; 119.66 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது.

கொவிட் திட்டங்களுக்கான வெளிநாட்டு நிதியுதவிகள்

இலங்கை அரசாங்கமானது கொவிட் அவசரகால பதிலளிப்புத் திட்டங்களுக்காக 2020 ஜனவரி முதல் 2022 மே வரையான காலப்பகுதியில் பல்வேறு நாடுகளுடன் 11 ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளது. இதன் மொத்த பெறுமதி 10,781 கோடி ரூபாவாகும் (107,810 மில்லியன்) என மத்திய வங்கியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

ஆசிய அபிவிருத்தி வங்கி

2020.06.08 –  கொவிட் அவசரகால பதிலளிப்புத் திட்டத்துக்காக 3,000,000 அ.டொலர் (556.44 மில்லியன் ரூபா) பெறுமதியான ஒப்பந்தம் கைச்சாத்து.

2021.07.09 – பதிலளிக்கக்கூடிய கொவிட் 19 தடுப்பூசிகள் (விரைவான மீட்பு) திட்டத்துக்காக 84,000,000 அ.டொலர் (16,791.6 மில்லியன் ரூபா) பெறுமதியான ஒப்பந்தம் கைச்சாத்து.

2021.07.09 – பதிலளிக்கக்கூடிய கொவிட் 19 தடுப்பூசிகள் (திட்ட முதலீடு) திட்டத்துக்காக 66,000,000 அ.டொலர் (13,193.4 மில்லியன் ரூபா) பெறுமதியான ஒப்பந்தம் கைச்சாத்து.

புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கி – உலக வங்கி (ஐடீசுனு)

2020.04.03 – கொவிட் அவசரகால பதிலளிப்புத் திட்டம் மற்றும் சுகாதார அமைப்பு தயார்படுத்தல் திட்டத்துக்காக 35,000,000 அ.டொலர் (6685 மில்லியன் ரூபா) பெறுமதியான ஒப்பந்தம் கைச்சாத்து.

2021.05.13 – கொவிட் அவசரகால பதிலளிப்புத் திட்டம் மற்றும் சுகாதார அமைப்பு தயார்படுத்தலுக்கான இரண்டாம் கட்ட மேலதிக நிதியாக 54,000,000 அ.டொலர் (10,773 மில்லியன் ரூபா) பெறுமதியான ஒப்பந்தம் கைச்சாத்து.

2021.05.13 – கொவிட் அவசரகால பதிலளிப்புத் திட்டம் மற்றும் சுகாதார அமைப்பு தயார்படுத்தலுக்கான மூன்றாம் கட்ட மேலதிக நிதியாக 100,000,000 அ.டொலர் (20,000 மில்லியன் ரூபா) பெறுமதியான ஒப்பந்தம் கைச்சாத்து.

சர்வதேச அபிவிருத்தி சங்கம்

2020.03.04 – கொவிட் அவசரகால பதிலளிப்புத் திட்டம் மற்றும் சுகாதார அமைப்பு தயார்படுத்தல் திட்டத்துக்காக 93,600,000 அ.டொலர் (17,877.6 மில்லியன் ரூபா) பெறுமதியான ஒப்பந்தம் கைச்சாத்து.

2020.07.23 – கொவிட் அவசரகால பதிலளிப்புத் திட்டம் மற்றும் சுகாதார அமைப்பு தயார்படுத்தல் திட்டத்துக்கான மேலதிக நிதியாக (சலுகை கடன்) 33,049,597 ஓனுசு (8467.15 மில்லியன் ரூபா) பெறுமதியான ஒப்பந்தம் கைச்சாத்து.

23.07.2020 – கொவிட் அவசரகால பதிலளிப்புத் திட்டம் மற்றும் சுகாதார அமைப்பு தயார்படுத்தல் திட்டத்துக்கான மேலதிக நிதியாக (சலுகை அல்லாத கடன்) 41,900,000 அ.டொலர் (7784.63 மில்லியன் ரூபா) பெறுமதியான ஒப்பந்தம் கைச்சாத்து.

23.07.2020 – கொவிட் அவசரகால பதிலளிப்புத் திட்டம் மற்றும் சுகாதார அமைப்பு தயார்படுத்தல் திட்டத்துக்கான மேலதிக நிதியாக (மானியம்) 1,723,520 அ.டொலர் (320.21 மில்லியன் ரூபா) பெறுமதியான ஒப்பந்தம் கைச்சாத்து.

2021.05.13 – கொவிட் அவசரகால பதிலளிப்புத் திட்டம் மற்றும் சுகாதார அமைப்பு தயார்படுத்தல் திட்டத்துக்கான இரண்டாம் கட்ட மேலதிக நிதியாக 18,712,080 ஓனுசு (5361.81 மில்லியன் ரூபா) பெறுமதியான ஒப்பந்தம் கைச்சாத்து.

இறக்குமதி செய்யப்பட்டுள்ள மொத்த தடுப்பூசிகள்

இந்தியாவின் சேரம் இன்ஸ்டியூட் நிறுவனத்திடமிருந்து ஒரு டோஸ் 5.25 அமெரிக்க டொலர்கள் அடிப்படையில் 500,000 அஸ்ட்ராசெனெகா-கொவிஷீல்ட் தடுப்பூசிகள் 2,625,000 அ.டொலர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

சினோபோர்ம் சர்வதேச ஹொங்கோங் நிறுவனத்திடமிருந்து ஒரு டோஸ் 15 அமெரிக்க டொலர்கள் அடிப்படையில் 4,000,000 சினோபோர்ம் தடுப்பூசிகள் 60,000,000 அ.டொலர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

சினோபோர்ம் சர்வதேச ஹொங்கோங் நிறுவனத்திடமிருந்து ஒரு டோஸ் 7 அமெரிக்க டொலர்கள் அடிப்படையில் 19,000,000 சினோபோர்ம் தடுப்பூசிகள் 133,000,000 அ.டொலர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

நெதர்லாந்தின் பைசர் எக்ஸ்போர்ட் நிறுவனத்திடமிருந்து ஒரு டோஸ் 6.75 அமெரிக்க டொலர்கள் அடிப்படையில் 18,999,630 பைசர் தடுப்பூசிகள் 128,247,502.50 அ.டொலர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் ஹியுமன் தடுப்பூசி நிறுவனத்திடமிருந்து ஒரு டோஸ் 9.95 அமெரிக்க டொலர்கள் அடிப்படையில் 330,000 ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் 3,283,500 அ.டொலர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவிலிருந்து 1,500,100 டோஸ் மொடர்னா தடுப்பூசி (கோவெக்ஸ் திட்டம்) இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய தரவுத்தளத்தில் இல்லாத தகவல்கள்

இதேவேளை கொவிட் தொற்றுக்காலப்பகுதியில் நிலவிய பல்வேறு சர்ச்சை தொடர்பான விடயங்களுக்கான தரவுகள் அரசாங்கத்தால் பேணப்படவில்லை. கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட பின்னர் மீண்டும் கொவிட் தொற்றுக்குள்ளான நபர்கள் தொடர்பான விபரங்கள் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவில் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட பின்னர் உயிரிழந்தவர்களின் விபரம், கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாமையால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பில் தேசிய தரவுத்தளத்தில் எவ்வித தகவல்களும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தடுப்பூசியினால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் காரணமாக உயிரிழந்தமை தொடர்பில் விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்தப்பட்ட மரணங்கள் எவையும் இடம்பெறவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களில் காய்ச்சல், உடல் சிவத்தல் மற்றும் தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் வலி ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவை பொதுவாக வேறு வகையான தடுப்பூசிக்கு பின்னரும் ஏற்படும். அரிதாக சிலர் ஏனைய நோய்கள் தொடர்பிலும் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர். ஆனால் உண்மையான காரணத்தை அடையாளம் காண தீவிர அறிவியல் ஆய்வு தேவை என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 

News

எல்லைகள் வரையறுக்கப்படாது தனியார் பல்கலைக்கழகத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள கீரிமலை ஜனாதிபதி மாளிகை!

ந.லோகதயாளன் கீரிமலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைத்த ஜனாதிபதி மாளிகையும் அதனைச் சூழவுள்ள பிரதேசமும் ஆண்டொன்றிற்கு 10 ஆயிரம் டொலர்களுக்கு தனியார் பல்கலைக் கழகத்திற்கு குத்தகைக்கு…

By In
News

யானை – மனித முரண்பாடும் அதிகரிக்கும் உயிரிழப்புக்களும் !

வீ.பிரியதர்சன் உலகில் வனவிலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான முரண்பாடுகள் மனித நாகரிகம் தோன்றிய காலம் முதல் தொடர்கதையாகி வருகின்றன. இதில் முக்கியமாக யானை – மனித முரண்பாட்டைக் குறிப்பிடலாம். இலங்கையில்…

By In
News, Uncategorized

இரத்தினபுரி மாவட்ட ஊடவியலாளர்களுக்கான தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை  

பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான தகவல் அறியும் உரிமைக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) குறித்து ஊடகவியலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் RTI…

By In
News

சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் பொறிமுறை வலுப் பெற வேண்டும்!

வீ.பிரியதர்சன் சிறுவர் பாதுகாப்பு என்பது ஒரு கூட்டுப்பொறுப்பு, பிரச்சினைகளுக்குரிய தீர்வைப் பெறவே அனைவரும் முயற்சிக்கின்றனர். ஆனால் பிரச்சினைகள் வரும் முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. இதற்கு முக்கிய…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *