தகவலறியும் உரிமைச் சட்டம் ஊடாக நாம் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலம் எந்தவொரு விரும்பிய மொழியிலும் தகவல் கோரிக்கையினை தாக்கல் செய்யலாம் என்பது யாவரும் அறிந்த விடயம். அத்துடன் குறித்த பகிரங்க அதிகாரசபையில் மும்மொழியும் பரீட்சையமான ஓரு தகவல் உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது மொழிபெயர்ப்பு செய்யும் வசதி இருக்க வேண்டும். இது சட்டமும் கூட. சிங்களம், ஆங்கிலம் தெரியாத தமிழ் பிரஜை தகவலொன்றினை பெற வேண்டுமாயின் தமிழில் தான் தகவல் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் அதே போல தான் ஏனைய மொழிகளிற்கும்.
நாம் பல பகிரங்க அதிகாரசபைகளிற்கு தகவலறியும் விண்ணப்பங்களை தமிழில் தாக்கல் செய்திருந்தோம். அதற்கு அநேகமான நிறுவனங்கள் எமது கோரிக்கையினை மதித்து தமிழ் மொழியிலேயே தமது பதில் கடிதங்களை அனுப்பிவைத்திருந்தன. தகவலிற்கான கோரிக்கை கிடைக்கப்பெற்று 14 நாட்களுக்குள் எமது கோரிக்கையினை ஏற்கின்றார்களா இல்லையா என்றும் மறுக்கப்படின் அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டு பதில் அனுப்ப வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. தகவலை வழங்கலாம் என்று தீர்மானம் எடுக்கப்பட்டு 14 நாட்களுக்குள் பதில் தகவல் கோரியவரிற்கு அனுப்பி வைக்கவேண்டும். ஆனாலும் 14 நாட்களையும் கடந்து சில தாமதிப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. அதற்கான காரணமாக கூறப்படுவது தபால் விநியோகத்தில் ஏற்படும் காலதாமதம். நாம் பதிவுத்தபால் மூலமாகவே கோரிக்கைகளை பகிரங்க அதிகாரசபைகளிற்கு அனுப்ப வேண்டும். ஆனால் பதிவுத்தபால் கிடைப்பதற்கு பல நாட்கள் எடுக்கும் என்பது பலரால் தெரிவிக்கப்படும் பொதுவான விடயம். இருப்பினும் மின்னஞ்சல் மூலமாகவும் தகவல் கோரிக்கையை முன்வைக்கலாம் என்று கூறப்படுகின்றது. ஆனால் சில பகிரங்க அதிகாரசபைகளினால் அவர்களது இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரி தவறாகவுள்ளது. மாறாக சில பகிரங்க அதிகாரசபைகள் உடனடியாக தமது பதிலை அனுப்பி வைத்துமுள்ளன. இதே போன்ற காரணங்களினால் எமக்கு சரியாக 14 நாட்களுக்குள் ஏதாவதொரு பதில் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்க இயலாது. இதனால் மேன்முறையீடு செய்வதற்கான நாட்களும் தாமதமாகின்றன.
எனவே சிலவேளைகளில் நாம் தொலைபேசியூடாக தகவல் அதிகாரியினை தொடர்பு கொள்ள வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது. அதேபோன்று சில அதிகாரசபைகள் எமக்கு தொடர்பினை ஏற்படுத்தி “நீங்கள் தமிழ் மொழியில் கோரிக்கையினை அனுப்பி வைத்திருக்கின்றீர்கள். தமிழ் வாசிக்கக் கூடியவர்கள் இங்கு இல்லை. என்ன செய்வது என்றும் ஏன் உங்களுக்கு இந்தத் தகவல்?” என்றும் என்னை கேட்டுள்ளனர். அவ்வாறு தகவல் கோருபவரிடம் வினவ முடியாது. அத்துடன் அதிகபட்ச வெளிப்படுத்தல் கோட்பாடானது இயன்றளவு சாத்தியமான தகவல்களை வெளிப்படுத்துமாறு அரசாங்கத்தை கோருகின்றது. இதற்கு மாறாக சில பொது அதிகாரசபைகள் நாம் அனுப்பிய வினாக்களில் சந்தேகங்கள் இருப்பதனால் கடிதம் மூலமாக எம்மை தொடர்புகொண்டு தமது சந்தேகங்களை தீர்க்கும் படி கேட்டுள்ளன. மேலும் தொலைபேசி மூலம் சில அதிகாரிகளுடன் தொடர்புகொள்ளும் போது மிகவும் பொறுமையாக, எமக்கு மதிப்பளித்து எம்முடன் உரையாடி எமக்கான வழிகாட்டல்களை சரியாக மேற்கொள்கின்றனர். இவ்வாறான அதிகாரிகளிற்கு எதிர்மறையான அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். இருப்பினும் தகவலறியும் உரிமை எங்கள் உரிமை என்பதனால் அதனை விடாமுயற்சியுடன் பயன்படுத்துவோம்.
தற்போது ஏற்பட்டுள்ள தொற்றுநோய் காலத்தில் ஆங்காங்கே தனிமைப்படுத்தல் ஊரடங்குகளும் சில பிரதேசங்களும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் குறிப்பிட்ட காலத்திற்குள் பகிரங்க அதிகாரசபைகளிடமிருந்து பதில்கள் கிடைக்கப்பெறும் என்பது கேள்விக் குறியாக இருக்கின்றது.
Recent Comments