பகிரங்க அதிகாரசபையிடம் தகவலுக்கான கோரிக்கை விடுக்கப்பட்டு தகவல் அலுவலர் தகவலை சட்டத்தினால் தகவல் வழங்குவதற்கு விதிவிலக்களிக்கப்பட்ட விடயங்கள் அன்றி ஏனைய தகவல்களை வழங்க மறுத்தால் அல்லது அவரது பதிலில் திருப்தியடையாவிடின் குறித்த பகிரங்க அதிகாரசபையிலுள்ள குறித்தளிக்கப்பட்ட அலுவலகரிடம் மேன்முறையீடு செய்யலாம். குறித்தளிக்கப்பட்ட அலுவலகரும் மேன்முறையீட்டிற்கு பதிலளிக்காவிடின் அல்லது அவரது பதிலில் திருப்தியில்லையாயின் தகவலறியும் உரிமை ஆணைக்குழுவிடம் மேன்முறையிடலாம்.
தகவலறியும் உரிமை ஆணைக்குழு என்றால் என்ன? இது எவ்வாறு எமது கோரிக்கைக்கு எவ்வாறு பதிலளிக்கும் என்ற கேள்வி எழலாம்.
தகவலறியும் உரிமை ஆணைக்குழுவானது, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதோடு பகிரங்க அதிகாரசபைகள் இச் சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட தமது கடமைகளை சரிவர செய்கின்றனவா இல்லையா என்று மேற்பார்வை செய்கின்றது. அத்துடன் இவ் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் சுயாதீனமானதும் வெளிப்படையானதுமாகும். சட்டத்தினை மேலும் சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கவும், சட்டத்தை மீறினால் அதன் பெயரில் வழக்கு தொடரவும் அல்லது மேன்முறையீடுகளை செய்வதற்கான அதிகாரத்தை ஆணைக்குழு கொண்டுள்ளது.
ஆணைக்குழுவில் 5 உறுப்பினர்கள் காணப்படுவார்கள். அவர்களில் மூவர் பத்திரிகை ஆசிரியர்கள், வெளியீட்டாளர்கள் மற்றும் ஊடக அமைப்புக்கள், சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களால் பெயர் குறிப்பிட்டு அரசியலமைப்புப் பேரவைக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள். மீதமுள்ள இருவர் அரசியலமைப்புப் பேரவையினால் திறந்த விண்ணப்பத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களாகும். இதனால் இவ் ஆணைக்குழு சுதந்திரமானது.
ஆணைக்குழு ஆண்டறிக்கை ஒன்றினை வருடாந்தம் வெளியிடும். இதில் அதன் அனைத்து செயற்பாடுகளும் உள்ளடக்கப்பட்டிருக்கும். இதன் ஒரு பிரதி நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுவதோடு இன்னொரு பிரதி நாட்டின் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்படும். பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்து இரண்டு வாரங்களின் பின்னர் இவ்வறிக்கை பொதுமக்களின் பார்வைக்காக வழங்கப்பட வேண்டும். அதாவது ஆணைக்குழுவின் அலுவலகத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும். அல்லது அதன் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு அதன் செயற்பாடுகளை பகிரங்கப்படுத்துவதனால் இவ் ஆணைக்குழு வெளிப்படைத்தன்மையானதாகும்.
இவ் தகவலறியும் உரிமை ஆணைக்குழு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ளது. மேலும் இவ் ஆணைக்குழுவிற்கு சென்று தகவலறியும் உரிமைச் சட்டம் பற்றிய மேலதிக தெளிவான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.
மூலம்: தகவலறியும் உரிமைச் சட்டத்திற்கான பிரஜைகள் கையேடு
Recent Comments