2020! உலகளாவிய ரீதியில் மக்களை இணையத்தோடு முடக்கிப்போட்ட வருடமாகும். அதில் இலங்கை மாத்திரம் விதிவிலக்கல்ல. கல்வி, வியாபாரம், தொடர்பாடல் போன்றவற்றை முழுமையாக இணையத்தளங்களினூடாக மேற்கொண்ட நிலையை அவதானிக்கவும் அனுபவிக்கவும் நேர்ந்தது. இணையத்தினூடாக பெரும் நன்மைகளை அனுபவித்து வந்த அதேவேளை அதன் மறுபக்கத்தையும் நாம் சிந்திக்க வேண்டும்.
இணையத்தினூடான மோசடிகள் மற்றும் வன்முறைகள் தொடர்ந்தும் உலகளாவிய ரீதியில் பதிவாகிவருவதை நாம் அறிகின்றோம். இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான குறிப்பிட்டவொரு காலப்பகுதியில் மாத்திரம் பதிவான சம்பவங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இலங்கை கணனி அவசர தயார் நிலை குழுவிடமிருந்து (SLCERT) பெற்றுக்கொண்டோம்.
அதே போல் கடந்த 10 வருடங்களில் பதிவாகிய இணைய குற்றங்கள் மற்றும் மோசடிகள் தொடர்பில் இலங்கை கணனி அவசர தயார்நிலை குழுவினால் வெளியிடப்பட்ட 2019ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையின் தரவையும் எம்மால் பெற முடிந்தது.
(https://www.cert.gov.lk/Downloads/General/Sri_Lanka_CERT_Annual_Activity_Report_2019.pdf)
இந்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில், இணையப்பாவனையாளர்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்ச்சியான அதிகரிப்பையே காட்டுகின்றது.
இவ்விரண்டு தரவுகளின் அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளில் சமூகவலைத்தளங்களில் பதிவான முறைப்பாடுகளின் உயர்ந்தபட்ச எண்ணிக்கை 3685 ஆக காணப்படுகிறது. எனினும் இவ்வருடத்தின் குறிப்பிட்ட 9 மாதங்களில் பதிவான சமூகவலைத்தள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 13,855 ஆகும். சமூக ஊடகங்களின் முறைப்பாடுகள் பன்மடங்கில் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
இலங்கையில் சமூக ஊடகங்களை பாவிக்கும் இளைஞர்களில் 65% ஆனோர் தங்கள் மின்னஞ்சல் முகவரியை தெரியப்படுத்தியிருக்கும் அதேவேளை, 47% ஆனோர் தமது தொலைபேசி எண்களை தெரியப்படுத்தியுள்ளனர். மேலும் இளைஞர்களில் 24% ஆன சமூக ஊடக பாவனையாளர்கள் தமது கடவுச்சொல்லை ஒரு போதும் மாற்றியமைக்காதவர்களாக காணப்படுகின்றனர். 30% ஆன பயனர்கள் முக்கியமான ஆவணத்தைப் பாதுகாக்க கடவுச்சொற்களை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரியாதவர்களாக காணப்படுகின்றனர் என 2019 முதல் 2023 வரையான SLCERT இன் மூலோபாய தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(https://www.cert.gov.lk/Downloads/NCSStrategy.pdf)
இணையப் பாவனையாளர்களது பாதுகாப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்துக்களையும், பாதுகாப்பு முறைகளையும் தெரியப்படுத்தி வந்தாலும் இவ்வருடத்தில் குறிப்பிட்ட 9 மாத காலப்பகுதியில் பெறப்பட்ட புள்ளிவிபரங்கள் நாம் நமது பாதுகாப்பை மறந்து செயற்படுவதையும், குற்றங்களும் வன்முறைகளும் இணையவழியாகவும் தொடர்வதையும் எடுத்துக்காட்டுகின்றது.
Recent Comments