News

மத்தள சர்வதேச விமான நிலையத்தினால் 10 வருடங்களில் வருமானம் 63 கோடி : செலவு 5876 கோடி!

By In

க.பிரசன்னா

பாரிய முதலீட்டுடன் நிர்மாணிக்கப்பட்ட மத்தள சர்வதேச விமான நிலையம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டு 10 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் எதிர்பார்த்தளவு அதன்மூலம் நாட்டுக்கு வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றது. 

தற்போது குறித்த விமான நிலையத்தின் மூலம் பெற்றுக்கொள்ளும் வருமானம் அதன் செயற்பாட்டு செலவினங்களுக்கு கூட போதுமானதாக இன்மையால் விமான சேவைகள் கம்பனியின் வருமானத்திலிருந்து அவற்றைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலைமையானது மக்கள் மீதான கடன் சுமையினை மேலும் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளது. 

2013 – 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மத்தள சர்வதேச விமான நிலையத்தின் மூலம் 633.36 மில்லியன் ரூபா (633,364,859.00) வருமானமாக பெறப்பட்டுள்ளதுடன் 58,769.88 மில்லியன் ரூபா செலவு ஏற்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் மத்தள சர்வதேச விமான நிலைய தகவல் அதிகாரிக்கு 28.03.2022 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு உரிய பதில் வழங்கப்படாமையால் 06.06.2022 ஆம் திகதி குறித்தளிக்கப்பட்ட அதிகாரிக்கு மேன்முறையீடு செய்யப்பட்டது. எனினும் உரிய பதில் வழங்கப்படாமையினால் 21.07.2022 ஆம் திகதி தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவில் மேன்முறையீடு மேற்கொள்ளப்பட்டது. 02.02.2023 ஆம் திகதி இடம்பெற்ற மேன்முறையீட்டு விசாரணையின் போது விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்துக்கு உரிய தகவலை வழங்குமாறு உத்தரவிடப்பட்டது. இதன்படி 03.03.2023 ஆம் திகதி விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தகவல் அதிகாரி திருமதி எம்.சி.ஜி.மஹிபாலவினால் வழங்கப்பட்ட தகவலிலேயே மத்தள சர்வதேச விமான நிலையத்தின் வருமானம் மற்றும் இழப்புக்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தினை உருவாக்கும் தேவையின் பிரகாரம் மத்தள சர்வதேச விமான நிலைய நிர்மாணம் சீன அரசின் சலுகை கடன் முறைமையின் கீழ் இரு நாடுகளுக்குமிடையே 2009 டிசம்பர் 23 ஆம் திகதி 209 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது. 2000 ஹெக்டெயர் காணியை பயன்படுத்தி நிர்மாண நடவடிக்கைகள் 2009 நவம்பர் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன் 2013 மார்ச் மாதம் 18 ஆம் திகதி பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. 

விமான சேவைகளும் பயணிகள் வருகையும்

2013 ஆம் ஆண்டு மத்தள சர்வதேச விமான நிலையம் உத்தியோகபூர்வமாக தமது பணிகளை ஆரம்பித்துள்ள நிலையில் 2013 – 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 178,967 பயணிகளை கையாண்டுள்ளதுடன் 5633 விமானங்கள் தரையிறங்கியுள்ளன. அதிகபட்சமாக 2014 ஆம் ஆண்டு 40,386 பயணிகளை கையாண்டுள்ளதுடன் 1492 விமானங்கள் தரையிறங்கியுள்ளன. 2013 ஆம் ஆண்டு 36,137 பயணிகளையும் 2021 ஆம் ஆண்டு 32,957 பயணிகளும் 2017 ஆம் ஆண்டு 22,927 பயணிகளும் வருகை தந்துள்ளனர். ஏனைய ஆண்டுகளில் 20 ஆயிரத்துக்கும் குறைவான பயணிகளையே விமான நிலையம் கையாண்டுள்ளது. குறைந்தபட்சமாக 2019 ஆம் ஆண்டு 1403 பயணிகளே வருகை தந்துள்ளனர்.

வருமானமும் செலவும்

மத்தள சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினால் விமான வழிச்செலுத்தல் சேவை, தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் மற்றும் பாதுகாப்பு சேவை என்பன வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது மத்தள சர்வதேச விமான நிலையத்தினூடாக ரெட்விங் எயார்லைன், உஸ்பெகிஸ்தான் எயார்லைன் என்பன விமான சேவையினை வழங்குவதுடன் விமான சேவைகள் நிறுவனத்தினால் விமான நிலைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. தரைவழி போக்குவரத்தை ஸ்ரீலங்கா எயார்லைன்ஸும் உணவு வழங்கல் சேவையினை ஸ்ரீலங்கன் கெட்டரிங் நிறுவனமும் விமான எரிபொருளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் வழங்கி வருகின்றன.

2013 ஆம் ஆண்டு மத்தள சர்வதேச விமான நிலையம் உத்தியோகபூர்வமாக தமது பணிகளை ஆரம்பித்துள்ள நிலையில் அந்த வருடத்தில் 48,010,898 ரூபா வருமானமாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள போதும் 3,348,619,105 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 2014 ஆம் ஆண்டு 136,096,612 ரூபா வருமானமாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் 3,234,784,248 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு 93,471,586 ரூபா வருமானமாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் 4,504,270,016 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு 77,998,185 ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளதுடன் 21,156,145,902 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.

மத்தள விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஊழியர்களின் போக்குவரத்துக்காகவும் அதிகமான தொகையினை செலவளிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. மேலும் மின்சாரம் மற்றும் நீர் கட்டணத்துக்காகவும் பெருந்தொகை செலவிடப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. வருமானமற்ற நிலையில் காணப்படும் விமான நிலையத்தின் செலவுகள் பன்மடங்கு காணப்படுகின்றது.

2013 – 2022 ஆம் ஆண்டு வரை ஊழியர்களின் கொடுப்பனவுகளுக்காக மாத்திரம் 6888.64 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. இதில் 2020 ஆம் ஆண்டு 679.35 மில்லியன் ரூபாவும் 2021 ஆம் ஆண்டு 876.69 மில்லியன் ரூபாவும் 2022 ஆம் ஆண்டு 1069.26 மில்லியன் ரூபாவும் செலவு செய்யப்பட்டுள்ளது. 2013 – 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஊழியர் போக்குவரத்துக்காக 169.34 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு 20.84 மில்லியன் ரூபாவும் 2022 ஆம் ஆண்டு 31.93 மில்லியன் ரூபாவும் செலவு செய்யப்பட்டுள்ளது.

2013 – 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மத்தள விமான நிலையத்தின் மின்சார கட்டணமாக  908.89 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியேற்பட்டுள்ளது. 103.49 மில்லியன் ரூபா நீர் கட்டணமாக செலுத்த வேண்டியேற்பட்டுள்ளது. 

நாடு பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள நிலையிலும் மக்களுக்கான நிவாரணங்கள் வழங்குவதில் அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்யும் நிலையிலும் இலாபமற்ற ஒரு நிறுவனத்துக்காக பொதுமக்களின் பணம் பாரிய அளவில் வீணடிப்புச் செய்யப்படுகின்றது. நாட்டின் தேவைக்கு அபிவிருத்தி திட்டங்கள் மிகவும் அவசியமாகவுள்ள நிலையில் அரசியல் இலாபங்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டங்கள் மக்களுக்கு பாரிய சுமையினையே ஏற்படுத்தியுள்ளன. 

News, Uncategorized

இரத்தினபுரி மாவட்ட ஊடவியலாளர்களுக்கான தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை  

பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான தகவல் அறியும் உரிமைக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) குறித்து ஊடகவியலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் RTI…

By In
News

சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் பொறிமுறை வலுப் பெற வேண்டும்!

வீ.பிரியதர்சன் சிறுவர் பாதுகாப்பு என்பது ஒரு கூட்டுப்பொறுப்பு, பிரச்சினைகளுக்குரிய தீர்வைப் பெறவே அனைவரும் முயற்சிக்கின்றனர். ஆனால் பிரச்சினைகள் வரும் முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. இதற்கு முக்கிய…

By In
News

பொருளாதார நெருக்கடியால் தொழில்தேடி வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ந.லோகதயாளன் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ்  மாவட்டச் செயலகங்கள் மற்றும் வெளிநாட்டு…

By In
News

நுவரெலியாவில் சட்டவிரோதமான கட்டுமானங்களின் பின்னணியில் அரசியல் அதிகாரமா?

ஆர்.எப்.எம் சுஹேல்- நுவரெலியா உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த வேட்பாளர்கள் உட்பட பலரது வீடுகள் உரிய விதிமுறைகளைப் பேணாது சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *