News

மக்களின் பின்னூட்டல் மற்றும் பங்களிப்புகளற்ற உள்ளூராட்சி சபை வரவுசெலவு திட்டப் பிரேரணை

By In

– சாமர சம்பத்

ஆண்டு இறுதியில் அதாவது நவம்பர்-டிசம்பர் காலப்பகுதியில் பெரும்பாலான மக்கள் கவனம் செலுத்தும் முக்கிய விவகாரங்களில் வரவு செலவுத் திட்டமும்  ஒன்றாகும். தேசிய மட்டத்தில், நாட்டில் அடுத்த வருடத்திற்குரிய செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான வரவு செலவுத் திட்டப் பிரேரணை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்படுவதுடன் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களிலும் நிறைவேற்றப்படுகின்றது.

மாகாண சபைகள் தற்சமயம் செயற்படாத காரணத்தினால், அவற்றின் வரவு செலவுத்திட்டங்கள் சமர்ப்பிக்கப்படாவிட்டாலும், எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டங்கள் நாட்டில் உள்ள 341 உள்ளூராட்சி மன்றங்களிலும் இந்நாட்களில் மேற்கொள்ளப்படுகின்றது. அப்படி இருந்தும் மக்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வு குறைவாகவே காணப்படுகின்றது.

எந்தவொரு அரசாங்க நிறுவனமும் வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கும்போது மூன்று முக்கிய நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவையாவன, வரவு செலவுத் திட்ட முன்மொழிவைத் திட்டமிடல்/அமைத்தல், அதனை நடைமுறைப்படுத்தல் மற்றும் பின்னூட்டங்கள். முதல் இரு செயல்முறைகள் மேற்கொள்ளப்பட்டாலும், மூன்றாவது செயற்பாடான பின்னூட்ட செயல்முறை நடைமுறைப்படுத்தப்படுவது மிக அரிது. அதேபோல நாடாளுமன்றத்தில் பிரேரிக்கப்படும்  தேசிய மட்ட வரவு செலவுத் திட்டம் மீதான தொடர் கண்காணிப்பு அதாவது பின்னூட்டல் செயல்பாடு மேற்கொள்ளப்படுவதும் மிகக் குறைவாகும்.

உள்ளூராட்சி சபையான குளியாபிட்டிய நகர சபையினால் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் எவ்வாறு அமுல்படுத்தப்பட்டுள்ளன என்பதை அறிய தகவல் அறியும் உரிமை சட்டத்தைப் பயன்படுத்தினோம்.  இதன் மூலம் கிடைப்கப்பெற்ற தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில்   சகல வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளும் குறிப்பிடப்பட்டிருந்த விதத்தில்  அவ்வாறே நடைமுறைப்படுத்தத் தவறியதாகத் தெரிகிறது.

2022 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள்

குளியாபிட்டிய நகர சபையினால் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில், பிரதேசத்தில் சமூக மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மூன்று வளர்ச்சித் துறைகளைக் கண்டறிந்து, சாலை பராமரிப்பு மற்றும் மேம்பாடு, புதிய கட்டுமானம் மற்றும் பழுதுபார்ப்பு, சமூக மேம்பாடு மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் போன்ற மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக 76 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் 2022 ஆம் ஆண்டிற்கான 77 அபிவிருத்தி முன்மொழிவுகள் நகர சபையினால் முன்மொழியப்பட்டுள்ளன.

செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்

வீதி பராமரிப்பு மற்றும் அபிவிருத்தியின் கீழ் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளில் 07 முன்மொழிவுகளை நகர சபையால் நடைமுறைப்படுத்த முடிந்துள்ளது. அதற்காக 36 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வருடம் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்ட பாரிய செயற்திட்டமாக “குளியாபிட்டிய நகர சபையின் புதிய பொதுச்சந்தை மற்றும் பல்நோக்கு கட்டிடம் நிர்மாணிப்பு” பணிக்காக 69 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. இவ்வருடம் இக்கட்டடத்தை திறப்பதற்கு நகர சபை எதிர்பார்த்திருந்த போதிலும் தற்போது வரை கட்டி முடிக்க முடியாத காரணத்தினால் அடுத்த வருடம்வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய நகரசபையின் நிதி ஒதுக்கீடு  மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் நகர சபையினால் முன்வைக்கப்பட்ட அனைத்து யோசனைகளையும் நடைமுறைப்படுத்த முடியவில்லை.

 முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்கான காரணங்கள்

வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் முன்வைக்கப்படும் அனைத்து முன்மொழிவுகளையும் நிறைவேற்றுவதற்கு நகர சபை கடமைப்பட்டுள்ள போதிலும் முன்மொழிவுகளை நிறைவேற்ற முடியாமல் போனமை தொடர்பாக நகர சபை பல்வேறு காரணிகளை முன்வைக்கிறது. இதன்படி, சபை நிதியினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களைத் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளதாகவும், அதற்கமையவே குறித்த திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதைத் தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டியுள்ளதாகவும் மாநகர சபை தெரிவித்துள்ளது. மேலும், வடமேல் மாகாண ஆளுநர், “அரசாங்க செலவினங்களைக் கட்டுப்படுத்துதல்” என்ற தலைப்பில் கடிதம் ஒன்றை அனைத்து நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்கும் அனுப்பியுள்ளதாகவும், வரவு செலவுத் திட்டத்தில் ஏற்கனவே நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பான நிர்மாண மற்றும் திருத்தப் பணிகளுக்கு உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் ஆளுநரின் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுபோன்ற காரணங்களால் வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிந்துள்ள  சகல விடயங்களையும் நடைமுறைப்படுத்த முடியாமல் போனதாக நகர சபை தெரிவித்துள்ளது.

பல்வேறுபட்ட கருத்துக்கள்

குளியாபிட்டிய நகரசபையின் தலைவர் திரு.ஏ.எம்.எல்.அதிகாரியிடம் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை முழுமையாக நடைமுறைப்படுத்தாமை குறித்து வினவியபோது, வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை இயன்றவரை அமுல்படுத்த நகர சபை முயற்சித்ததாக தெரிவித்தார். செயல்படுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் , பொதுமக்களின் பணம் மிகவும் கவனமாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் ஸ்திரமின்மை மற்றும் தொற்றுநோய் நிலைமை காரணமாகப் பல செயற்பாடுகள் உரிய முறையில் நிறைவேற்றப்படாமை தொடர்பில் தாம் வருந்துவதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் நகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் வினவியபோது, நகர சபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும் பொருளாதார நெருக்கடியினால் திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போனதாகவும் குறிப்பிட்டனர். இருப்பினும் கடந்த வருடத்தில் நிறைவேற்ற முடியாத தீர்மானங்கள் இவ்வருடம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.

நகர சபையின் வரவு செலவுத்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் நகர சபை எல்லைக்குள் இது தொடர்பில் மக்களிடம் வினவப்பட்ட போது, அது தொடர்பில் உரிய முறையில் அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பது தெளிவானது. நகரசபை ஆண்டுதோறும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை மேற்கொள்கின்றது என்பதைக் கூடச் சிலர் அறிந்திருக்கவில்லை. இது வருத்தமளிக்கும் காரணியாகத் திகழ்கின்றது. 

நிறைவேறாத முன்மொழிவுகளை நிறைவேற்றுதல்

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை ஏற்றுக்கொண்ட பிறகு, அந்த நிறுவனங்கள் வரி செலுத்தும் மக்களுக்கு அவற்றை முறையாக நடைமுறைப்படுத்தக் கடமைப்பட்டுள்ளன. ஆனால், வரவு செலவுத் திட்டம் தொடர்பான கால அவகாசம் முடிந்த பிறகும், அதை யாரும் பின்தொடர அல்லது பின்னூட்டப்படாததன் காரணத்தால், அந்த அனைத்து முன்மொழிவுகளையும் நடைமுறைப்படுத்த, குறித்த மக்கள் பிரதிநிதிகளும் அக்கறை காட்டுவதில்லை. இதனால்தான் வரவு செலவுத் திட்ட முன்மொழிவை திட்டமிடல், செயல்படுத்தல் போன்ற நடைமுறைகள் போலவே   பின்தொடர்தல் அல்லது பின்னூட்டல் செயல்பாடும் முக்கிய பங்கு வகிக்கின்றது. பாராளுமன்றத்திலும் உள்ளூராட்சி நிறுவனங்களிலும் நிதி செலவிடும் செயல்முறையைச் சீரமைக்க ஒரு பொது மக்கள் பங்கேற்பு முறைமை அவசியமாகும். மேலும் இது இதன்மூலம் மக்கள் பின்தொடர்தல் அல்லது பின்னூட்டல் நடைமுறையை மிகவும் திறமையாகவும் வெளிப்படையாகவும் மேற்கொள்ள அதிக வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியுமாகவிருக்கும்.

News

வட மாகாண பாடசாலைகளில் அதிகரிக்கும் மாணவர் இடைவிலகல்கள்

க.பிரசன்னா கல்வி அமைச்சின் தகவல்களின் படி, 2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கு வட மாகாணத்தில் தோற்றிய 17,627 மாணவர்களில் 2749 மாணவர்கள் வெட்டுப்புள்ளி மற்றும் அதற்கும்…

By In
News

பிப்ரவரி 16, 2023 அன்று நடைபெற்ற RTI ஊடகவியலாளர் மன்றத்தின் சிறப்பம்சங்கள்

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் நேரடி உதவித் திட்டத்தின் (DAP – Direct Aid Programme) அனுசரணையுடன் SLPI RTI ஊடகவியலாளர் மன்றத்தினை ஏற்பாடு…

By In
News

கண்டி மாவட்டத்தில் தரிசு நிலமாக காணப்படும் 1813 ஏக்கர் வயல் காணிகள்

முகம்மது ஆசிக் இலங்கை  மன்னர் காலத்திலிருந்தே விவசாய நாடாகப் புகழ் பெறுவதற்கான  பிரதான காரணம் இந்நாட்டு மக்களின் பிரதான உணவு சோறு என்பதால் ஆகும். ஆகாயத்திலிருந்து விழும்…

By In
News

2016 – 2022 : வெளிநாடுகளில் 3742 இலங்கைத் தொழிலாளர்கள் மரணம்! 2602 பேரின் உடல்கள் நாட்டுக்கு வரவில்லை!

க.பிரசன்னா நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளினால் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்மை, வறுமை போன்ற பல்வேறு காரணங்களினால் சமீப காலங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்வோரின்…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *