News

கோவிட் -19 நிதியுதவிகளுக்கு நடந்தது என்ன?

By In

ராகுல் சமந்த ஹெட்டியராச்சி

கோவிட் -19 பெருந்தொற்றுநோயால் உலகின் பல நாடுகளின் பொருளாதாரங்கள் சரிந்து வருகின்றன. தொற்றுநோயை எதிர்கொள்வது இந்த சூழலில், குறிப்பாக அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. அதன் காரணத்தினால், அந்த நாடுகளுக்கு அவர்களின் குடிமக்களினதும் வெளிநாடுகளினதும் உதவி தேவைப்பட்டது.

இலங்கை பல நாடுகள் மற்றும் உலக அமைப்புகளின் உதவிகளையும் பெற்றுள்ளது. செப்டம்பர் இறுதிக்குள், கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கு இலங்கை அரசாங்கம் 300 மில்லியன் டொலருக்கும் அதிகமான உதவிகளைப் பெற்றுள்ளது. இதற்கு மேலதிகமாக, 2020 ஜூலை 30 ஆம் திகதிக்குள் அரசாங்கம் 138 மில்லியன் டொலர்களை கடனாகப் பெற்றுள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் 2020 செப்டம்பர் 2 ஆம் திகதி சுகாதார அமைச்சு இதனை வெளிப்படுத்தியது.

2020 டிசம்பர் 1 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறியும் உரிமைக்கான விண்ணப்பத்திற்காக 2021 மார்ச் 15 ஆம் திகதி ‘இடுகம’ சமூக பாதுகாப்பு நிதி தொடர்பான தகவல்களை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டது. அதன்படி, மீதமாக 1.61 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி இருப்பது தெரியவந்தது. எவ்வளவு நிதி பெறப்பட்டது என்று அவர்கள் கேட்டபோது ஜனாதிபதி செயலகம் பதிலளிக்கவில்லை, ஆனால் பற்றுச்சீட்டுக்கள் வகைப்படுத்தப்படவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர். இருப்பினும், இந்த நிதிக்காக வெளிநாட்டு கடன்கள் அல்லது நன்கொடைகள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். எனவே ‘இடுகம’ சமூக பாதுகாப்பு நிதியத்தால் பெறப்பட்ட பணம் அனைத்தும் உள்ளூர் நன்கொடையாளர்களிடமிருந்து வந்ததாகத் தெரிகிறது.

தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக ‘இடுகம’ சமூக பாதுகாப்பு நிதியின் மூலம் திரட்டப்பட்ட 1.61 பில்லியனுடன் மேலதிகமாக இலங்கை அரசு மொத்தம் 58.7 பில்லியன் ரூபாவை வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் உதவிகளாகப் பெற்றுள்ளது. கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட இலங்கை அரசாங்கம் 2020 டிசம்பருக்குள் 60 பில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு மற்றும் உள்ளூர் உதவிகள் மற்றும் கடன்களைக் கொண்டிருந்தமை தெரியவந்தது.

இலங்கை அரசாங்கம் உலக சுகாதார ஸ்தாபனத்திடமிருந்து (WHO)  1.9 மில்லியன் டொலர், ஐ.நா. சனத்தொகை நிதியத்திலிருந்து (UNFPA) 2இலட்சத்து 12ஆயிரத்து 260டொலர்,  (212,260) யுனிசெப்பிலிருந்து 1இலட்சத்து 25ஆயிரம் டொலர், (125,000) ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து (ADB) 300 மில்லியன் டொலர் மற்றும் உலகளாவிய நிதியிலிருந்து 11இலட்சத்து 94ஆயிரத்து 424 டொலர் (1,194,424) பணத்தை வெளிநாட்டு நன்கொடைகளாகப் பெற்றுள்ளது.  அரசாங்கம் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 10 மில்லியன் டொலரையும், உலக வங்கியிலிருந்து 128 மில்லியன் டொலர்களையும் கடனாகப் பெற்றுள்ளது. ஆகையால், இலங்கைக்கு 319 மில்லியன் டொலர்கள் கிடைத்திருப்பதாக சுகாதார அமைச்சின் தகவல் தெளிவுபடுத்துகிறது, இது சமீப காலங்களில் 58 பில்லியன் ரூபாகவுக்கும் அதிகமாகும்.

பி.சி.ஆர் பரிசோதனைகளுக்காக ரூ .15 பில்லியன்

இலங்கை அரசு 2021 ஜூலை 3 ஆம் திகதிக்குள் 41இலட்சதது 19ஆயிரத்து 912பி.சி.ஆர் (4,119,912) பரிசோதனைகளை நடத்தியது, 15 பில்லியன் ருபாவுக்கும் அதிகமான பணத்தை செலவிட்டுள்ளது. உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெறப்பட்ட கடனையும், அரசாங்கத்திடமிருந்த  பணத்தையும் பி.சி.ஆர் பரிசோதனைக்காக அரசாங்கம் பயன்படுத்தியுள்ளது.

மேலும், ‘இடுகம’ நிதியில் இருந்து 100 மில்லியன் ரூபாவை பி.சி.ஆர் பரிசோதனைக்காக சுகாதார அமைச்சிற்கு ஒதுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் பிரகாரம், 40 மில்லியன் ரூபா நிதியை ஏற்கனவே சுகாதார அமைச்சுக்கு உள்ளூர் நிறுவனமான SLINTEC வழங்கியுள்ளது.

மேலும், ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பி.சி.ஆர் பரிசோதனை ஆய்வகத்தை மேம்படுத்த 3.41 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பி.சி.ஆர் பரிசோதனை ஆய்வகத்தை மேம்படுத்த 2.5 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 10 ஆம் திகதி 2021 அன்று சுகாதார அமைச்சிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, ‘இடுகம’ நிதியிலிருந்து 100 மில்லியன் ரூபா சுகாதார விழிப்புணர்வு திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அந்த தொகையில் 24.3 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை ஏற்கனவே செலவிடப்பட்டுள்ளது. அந்த பணம் TRIAD (PVT) Ltd என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இது தொடர்பாக கேள்வியெழுப்பிய போது, ​​சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எச். முனசிங்க, ‘இடுகம’ நிதியிலிருந்து ஏற்கனவே 67.5 மில்லியன்  ரூபா இந்த நோக்கத்திற்காக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் நோக்கங்களுக்காக 3.7 பில்லியன் ரூபா

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து 2021 ஜூலை 3 ஆம் திகதி வரை இலங்கை 1இலட்சத்து 60ஆயிரத்திற்கு (160,000) மேற்பட்ட நபர்களை தனிமைப்படுத்தியுள்ளது. இந்த தனிமைப்படுத்தல் செயன்முறை இராணுவத்தால் வேறு சில நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. தனிமைப்படுத்தல் மையங்களை நிர்மாணிப்பதற்கான கட்டுமான செலவுகள் மற்றும் தொழிலாளர்களுக்கான உணவு மற்றும் பிற வசதிகளுக்காக சுமார் 3.7 பில்லியன் ரூபாக்கள் ஏற்கனவே செலவிடப்பட்டதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, ‘இடுகம’ நிதியிலிருந்து கூட சுமார் 38 மில்லியன் தனிமைப்படுத்தல் நோக்கங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சிடமிருந்து பெறப்பட்ட தகவல்களிலிருந்து, கோவிட்-19 தொடர்பான ஆராய்ச்சிக்காக ‘இடுகம’ நிதியிலிருந்து சுமார் 3.5 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலதிகமாக, போக்குவரத்து மற்றும் எரிபொருள் செலவுகளுக்காக சுகாதார அமைச்சிற்கு 86.5 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அந்த தொகையில் 38 மில்லியனுக்கும் அதிகமான தொகை ஏற்கனவே பெறப்பட்டுள்ளது.

மேலும், தடுப்பூசி அட்டைகளை அச்சிடுவதற்காக ‘இடுகம’ நிதியிலிருந்து 41.5 மில்லியன் பெறப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கேள்வியெழுப்பிய போது, ​​செயலாளர் அரச அச்சகம் அட்டைகளை அச்சிட்டது என்றும் கூறினார்.

இருப்பினும், மேற்கண்ட தரவுகளை பகுப்பாய்வு செய்யும் போது, ​​கோவிட் -19 தடுப்பூசியை வெளிநாட்டு மற்றும் உள்ளூர் கடன்கள் மற்றும் ‘இடுகம’ நிதி உள்ளிட்ட நிதிகளிலிருந்து வாங்குவதைத் தவிர, அரசாங்கம் ஏற்கனவே இதர செலவுகளுக்காக 18 பில்லியனுக்கும் அதிகமாக செலவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இது நிதிகள் மற்றும் கடன்கள், ‘இடுகம’ நிதி உட்பட நாட்டின் மொத்த நிதியில் 24% ஆகும்.

இந்த செலவுகளைத் தவிர, கோவிட்-19 தடுப்புக்கான தடுப்பூசி செலவுகள் மற்றும் இதர செலவுகளின் தகவல் அறியும் கோரிக்கைகளுக்கு சுகாதார அமைச்சும் ஜனாதிபதி செயலகமும் இதுவரை பதிலளிக்கவில்லை.

News

10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!

ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில்  பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…

By In
News

போதையில் மூழ்கும் சமூகம்;  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…

By In
News

பூமியை நான்கு தடவைகள் சுற்றிவரும் அளவிற்கு இலங்கையை வானில் சுற்றியுள்ள மஹிந்த ராஜபக்ஷ

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி விமானப்படைத் தலைமையகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம்…

By In
News

ஜனாதிபதி அலுவலகத்தின் சொகுசு வாகனங்கள் ஏலத்திற்கு முன்னர் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம்!

● கோட்டாபயவின் பிரத்தியேக பணியாளர்களுக்கு 11 வாகனங்கள் ● ரணிலின் பிரத்தியேக பணிக்குழாமிற்கு 68 வாகனங்கள் ஜனக சுரங்க வாகனங்களை பொதுவாக காட்சியறைகளில் வைத்தே பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவர்….

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *