சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களும் மே தின நிகழ்வுகளும் இலங்கையின் தொழிலாளர் படையை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் நிலைத்தன்மையான சமூகப் பாதுகாப்பு முறைமையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதுடன் உறுதிப்படுத்துகின்றன. 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதியச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதிலும், அடுத்தடுத்த அரசாங்கங்கள் நீண்டகால சமூகப் பாதுகாப்பிற்கான எந்தவொரு விரிவான கட்டமைப்பையும் வெற்றிகரமாக செயற்படுத்தவில்லை. விவசாயிகள் மற்றும் மீனவர் சமுதாயங்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள் உட்பட பல்வேறு ஓய்வூதியத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, ஆனால் அவை நிலைத்தன்மையான மற்றும் நம்பகரமான பாதுகாப்பு வலையமைப்பை வழங்கத் தவறிவிட்டன. இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்தத் திட்டங்களை ஒரே நிறுவனத்தின் கீழ் ஒருங்கிணைக்கும் திட்டம் முன்னாள் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டதுடன், பின்னர் தொழில் அமைச்சினால் மீளாய்வு செய்யப்பட்டது. இந்த முன்மொழிவை மதிப்பிடுவதற்காக தொழில் அமைச்சின் செயலாளரின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டதுடன், இதன் முடிவில் தேவையான கொள்கை பரிந்துரைகளை சுட்டிக் காட்டும் அறிக்கை தயாரிக்கப்பட்டது.
யூன் 2024 இல், இந்தப் பரிந்துரைகளை அமுல்படுத்துவது குறித்த கலந்துரையாடல்கள் இது பொருத்தமான கொள்கை தீர்மானங்களை மதிப்பிடும் பணியைக் கொண்டிருந்த அமைச்சரவையின் துணைக்குழுவை அடைந்தன. இந்த முயற்சிக்கு முன்னாள் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் முழு ஆதரவும் இருந்தது. இருப்பினும், இது தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களிடையே பரவலான கரிசனங்களைத் தூண்டியதுடன், ரூ. 4 டிரில்லியனுக்கு மேல் மதிப்புள்ள ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ரூ. 400 பில்லியன் மதிப்புடைய ஊழியர் நம்பிக்கை நிதியத்தை (ETF) அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளக்கூடும் என்ற அச்சத்தை உருவாக்கியது. அந்த அறிக்கை இறுதி செய்யப்படுவதற்கு முன்பு, முந்தைய நிர்வாகம் அரசியல் ஸ்திரமின்மையை எதிர்கொண்டதுடன், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்மொழியப்பட்ட கொள்கையின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது. இந்தப் பரிந்துரைகளின் தாக்கங்களைக் கருத்தில் கொள்ளும் போது, பொது ஆய்வு மற்றும் வெளிப்படைத்தன்மை அவசியமாகும்.
அரைவாசி பணியாளர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.
இலங்கையின் மொத்த தொழிற் படை 8.5 மில்லியனாக உள்ளதுடன், 8.1 மில்லியன் பேர் முனைப்பாக பணியாற்றுகின்றார்கள். இவர்களில், 3.47 மில்லியன் பேர் முறைசார் துறையில் பணிபுரிகின்ற அதே நேரத்தில் 4.67 மில்லியன் பேர் – அண்ணளவாக 57% பேர் பணிப் பாதுகாப்பு மற்றும் சலுகைகள் பற்றாக்குறையாக உள்ள முறைசாரா துறையில் ஈடுபட்டுள்ளனர். தொழிற்படையானது விவசாயத்தில் 26.5%, கைத்தொழிற்துறையில் 26.5%, மற்றும் சேவைகளில் 47% என பிரிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், பணிபுரியும் நபர்களில் 15% பேர் மட்டுமே அரச மற்றும் பகுதியளவான அரச நிறுவனங்களில் பணிபுரிவதுடன், மொத்தமாக 1.2 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அரச துறை ஊழியர்களாவர். தனியார் துறை 43% பணியாளர்களுக்கு தொழில் வழங்கியுள்ளது (குடித்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம், 2022).
பணி ஓய்வு நன்மைகள் இருந்தபோதிலும், 2.6 மில்லியன் தொழிலாளர்கள் மட்டுமே EPF இன் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், மேலதிகமாக 1.2 மில்லியன் அரச பணியாளர்கள் அரச ஓய்வூதியங்களைப் பெறுகிறார்கள். இதனால், தேசிய பொருளாதார அபிவிருத்திக்கு அவர்கள் தொடர்ந்து பங்களித்த போதிலும், பெரும்பாலும் முறைசாரா துறையில் உள்ள சுமார் 4 மில்லியன் தொழிலாளர்கள் தங்கள் வயதான காலத்தில் போதுமான நிதியியல் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர்.
EPF இல்லாமல் பத்து லட்சம் பணியாளர்கள் தவிக்கின்றனர்
முறைசாரா துறையில் 3.7 மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்கள் EPF இன் கீழ் உள்ளடக்கப்பட வேண்டும் என்றாலும், தற்போது 2.6 மில்லியன் பேர் மட்டுமே இதன் மூலமாக பயனடைகிறார்கள். இதன் பொருள் என்னவெனில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான தகுதியுள்ள தொழிலாளர்கள் விலக்கப்பட்டுள்ளனர். தகுதிவாய்ந்த அனைத்து பணியாளர்களும் தங்களது நியாயமான சலுகைகளைப் பெறுவதை உறுதி செய்வதற்கு தொழில் அமைச்சு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏனெனில் அவ்வாறு செய்யத் தவறுவது தனிநபர்கள் மற்றும் பரந்த பொருளாதாரம் இரண்டையும் எதிர்மறையாக பாதிக்கிறது.
EPF சட்டமானது தொழில் அமைச்சினால் நிர்வகிக்கப்படும் அதே வேளையில், அதன் நிதியானது இலங்கை மத்திய வங்கியால் முதலீடு செய்யப்படுகின்றது. இருப்பினும், இந்த முதலீடுகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் செயற்திறன் குறித்து கரிசனங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதேபோல், ETF உறுப்பினர்கள் குறிப்பாக கொவிட் -19 பெருந்தொற்று போன்ற பொருளாதார நெருக்கடிகளின் போது பெரும்பாலும் தங்களுக்கு உரிமையுள்ள சலுகைகளைப் பெற போராடுகிறார்கள். வெறுமனே நிதி திரட்டுவதற்குப் பதிலாக, தொழிலாளர்கள் மேம்பட்ட நிதியியல் பாதுகாப்பையும் அவர்களின் பங்களிப்புகளுக்கு சிறந்த வருமானத்தையும் பெறுவதை உறுதி செய்வதை நோக்கி முயற்சிகள் திசைப்படுத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.
மீனவர் மற்றும் விவசாயிகளுக்கான ஓய்வூதியங்கள் வழங்கப்படவில்லை.
ஓய்வு காலத்தில் நிதியியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் ஓய்வூதியத் திட்டங்களை அனுபவிக்கும் பொதுத்துறை ஊழியர்களுக்கு மாறாக, தனியார் துறையில் உள்ள பணியாளர்கள் EPF மற்றும் ETF போன்ற பங்களிப்பு முறையிலான சேமிப்புத் திட்டங்களை நம்பியுள்ளனர். இருப்பினும், விவசாயிகள், மீனவர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் நாளாந்த கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட முறைசாரா பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு இதே போன்ற பாதுகாப்பு வலையமைப்புகள் இருப்பதில்லை.
இந்தக் குழுக்களுக்கு மீனவர் ஓய்வூதியம் மற்றும் இலங்கை சமூகப் பாதுகாப்பு சபையின் பங்களிப்பு முறையிலான ஓய்வூதியத் திட்டங்கள் போன்ற ஓய்வூதியங்களை வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், பெறுநர்களுக்கு குறைந்தளவான நன்மை பயக்கின்ற இந்தத் திட்டங்கள் பெரும்பாலும் காலம் கடந்தவை என்பதுடன் தோல்வியடைந்துள்ளன. விவசாயிகள் ஓய்வூதியத் திட்டம் 2012 முதல் புதிய உறுப்பினர்களை சேர்க்கவில்லை என்பதுடன், மீனவர் ஓய்வூதியமும் அதே சூழ்நிலையை எதிர்கொள்கிறது. பல்வேறு பங்களிப்பு நிதியங்களுக்குப் பொறுப்பான சமூகப் பாதுகாப்பு சபை, குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டவில்லை. இதன் விளைவாக, இந்த முயற்சிகள் அவை திட்டமிட்ட குறிக்கோள்களை அடையத் தவறிவிட்டதுடன், இதனால் மில்லியன் கணக்கானவர்கள் பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர்.
தொழில் அமைச்சின் அறிக்கையின் பிரகாரம், தொடர்புடைய நிறுவனங்கள் எதுவும் நிறுவப்பட்டதிலிருந்து எதிர்பார்க்கப்படும் இலக்குகளில் ஒரு பகுதியைக் கூட அடைய முடியவில்லை. திறைசேரி நிதியத்திற்கான அடிக்கடி தேவை மற்றும் இந்தத் திட்டங்களுடன் தொடர்புடைய அதிகரித்துவரும் எதிர்பாராத நிதியியல் சுமைகள் காரணமாக, அவை பயனற்றதாகிவிட்டன. எனவே, எதிர்காலத்தில் இந்த நிறுவனங்கள் அனைத்தையும் ஒரே நிறுவனமாக ஒருங்கிணைப்பதற்கு குறித்த அறிக்கை பரிந்துரைக்கிறது. மேலும், இது பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் ஈடுபாட்டைப் பேணுகையில் நிலைத்தன்மையான நிர்வாகத்தை உறுதி செய்வதற்கு பொருத்தமான சட்ட கட்டமைப்பை நிறுவுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
பணியிட காயங்கள் மற்றும் பணிப் பாதுகாப்புக்கான இழப்பீடு
1934 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டத்தின் கீழ், பணியில் காயமடைந்த பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளன. இருப்பினும், அதிகாரத்துவ தாமதங்கள் மற்றும் சட்ட சிக்கல்கள் பெரும்பாலும் சரியான நேரத்தில் பணம் செலுத்துவதைத் தடுக்கின்றன. சில தொழில் வழங்குனர்கள் தங்களது பொறுப்புகளைத் தட்டிக்கழித்து, காயமடைந்த தொழிலாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் நிதியியல் நெருக்கடியில் ஆழ்த்துகிறார்கள். இந்த அறிக்கையானது பணியிட முரண்பாடுகளுக்கு நியாயமான இழப்பீடு மற்றும் விரைவான தீர்வுகளை உறுதி செய்வதற்காக புதுப்பிக்கப்பட்ட தொழிலாளர் சட்டங்களின் அவசியத்தை சுட்டிக்காட்டுகிறது.
மேலதிகமாக, பணிப் பாதுகாப்பு, மகப்பேறு சலுகைகள் மற்றும் வேலையின்மை பாதுகாப்பு பற்றிய கலந்துரையாடல்களும் அறிக்கையில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன. சர்வதேச தரநிலைகளுடன் ஒப்பிடும்போது, இலங்கையின் சமூகப் பாதுகாப்பு முறைமையில் போதுமான பாதுகாப்புகள் இல்லை என்பதுடன், இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு சீர்திருத்தங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.
குறித்த அறிக்கையானது தனியார் துறை ஊழியர்களுக்கும் பொருத்தமான ஓய்வூதியத் திட்டத்தை முன்மொழிவதுடன், முறைசாரா பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு தேசியக் குழுக்கள் நிறுவப்பட வேண்டும் என்றும், சமூகப் பாதுகாப்பு, பணிப் பாதுகாப்பு மற்றும் சேவைத் தரநிலைகளுக்கு அவர்களுக்கு சமமான அணுகல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைப்பதுடன் நிறைவு பெறுகின்றது.
ஜனக சுரங்க, தகவல் அறியும் உரிமை மன்றம் 06-12-2024
Recent Comments