ஜனக்க சுரங்க
ரயில் கடவைகளில் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமுள்ளன. இதனைக் கருத்திற்கொண்டு, இச்சம்பவங்கள் தொடர்பாக அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டிய தருணம் இதுவாகும்.
பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் மோட்டார் சைக்கிள்கள், கார்கள், வேன்கள், பயணிகள் பேருந்துகள் மற்றும் பாதசாரிகள் ஆபத்தில் சிக்குவது குறித்து பல செய்திகள் வெளிவந்துள்ளன. இது, மக்களின் பாரிய பிரச்சினையாக இனங்காணப்பட்ட போதிலும், இதற்கு நீண்டகாலமாக நிரந்தரத் தீர்வு வழங்கப்படாமல் உள்ளது.
இது தொடர்பில், 2016ஆம் ஆண்டு 12ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ரயில்வே திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளரிடம் தகவல் விண்ணப்பம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.
அதில், இலங்கையில் உள்ள ரயில்வே கடவைகள் குறித்த தகவல்களை தெளிவாக மதிப்பீடு செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையில், பின்வரும் தகவல்கள் கிடைக்கப்பெற்றன.
1362 கடவைகள்
இலங்கையில் உள்ள மொத்த ரயில் கடவைகளின் எண்ணிக்கை 1,362 என ரயில்வே திணைக்கள தரவுகள் தெரிவிக்கின்றன. இவற்றில், 738 மட்டுமே முறையான கட்டமைப்பால் பாதுகாக்கப்படுகின்றன, 439 கடவைகள் பாதுகாக்கப்படாமல் உள்ளன. 185 ரயில்வே கடவைகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை எனவும் அந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இலத்திரனியல் சமிக்ஞை கட்டமைப்பு, தானியங்கி கடவை மூடல்கள் மற்றும் வாயில் காப்பாளர்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட கடவைகளின் எண்ணிக்கை 306 ஆகும். இவற்றில் 161 மட்டுமே மின்சார மணி மற்றும் வாயில் மூலம் குறைந்தபட்சமாக பாதுகாக்கப்பட்டுள்ளன. மேலும், 432 ரயில்வே கடவைகளில் மின்சார மணி மட்டும் இருப்பது தெரியவந்துள்ளது.
பாதுகாப்பற்றதாக அறிவிக்கப்பட்ட பெரும்பாலான ரயில்வே கடவைகளில், “ஆபத்து” அல்லது “ஜாக்கிரதை” போன்ற எச்சரிக்கைப் பலகைகள் மட்டுமே காட்டப்படும். நடைமுறையில், சில இடங்களில், இந்த எச்சரிக்கை பலகைகளும் விழுந்துவிட்டன அல்லது சிதைந்துவிட்டன. ஒரு சில ரயில் கடவைகளில் மட்டுமே தெளிவான எச்சரிக்கை பலகைகள் உள்ளன. இந்த ரயில் கடவைகள் குறித்த புதுப்பிக்கப்பட்ட அல்லது அண்மைய தகவல்கள் அரசாங்கத்திடம் இல்லை.
எனவே, இலங்கை வாழ் மக்கள் வீதிகளைப் பயன்படுத்தும் போது பெரும் ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் நிலையை எட்டியுள்ள நிலையில், இந்த விடயத்தில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள்
இப்பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் வினவப்பட்டது. எதிர்காலத் திட்டங்களில், மாஹோ/அநுராதபுரம் திட்டத்தின் கீழ், பாதுகாப்பற்ற 46 கடவைகளை முறையான பாதுகாக்கப்பட்ட கடவைகளாக மாற்றுவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், மொத்தம் 435 பாதுகாப்பற்ற கடவைகளிலும், கூடுதல் பாதுகாப்பு அவசியம் என அடையாளம் காணப்பட்ட கடவைகளிலும் கைமுறையாக இயக்கப்படும் வாயில்களை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. உள்ளூராட்சி நிறுவனங்கள் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பல்பணிப் பணியாளர்களும் (பல்வேறு பணிகளை செய்யக்கூடியவர்கள்) பணிக்கு அமர்த்தப்படுவார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகவல்களின் அடிப்படையில், ரயில்வே கடவைகளை கடந்து செல்லும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்பதையும், வீதியின் இருபுறமும் ஒரு தடவைக்கு இருதடவைகள் சரிபார்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துவது சிறந்தது.
Recent Comments