இலங்கை பாராளுமன்றம் 23 ஜூன் 2016 அன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் பிரஜைகளின் தகவல் அறியும் அடிப்படை உரிமையை அர்த்தபூர்மவமாக்கியது. அப்போதிருந்து, தகவல் கோரிக்கைகளைச் சமர்ப்பிப்பதன் மூலம் தகவல்களைப் பெறுவதற்கான செயன்முறையில் மக்கள் முனைப்புடன் பங்களித்து வருகின்றனர்.
கண்டி மாவட்டத்தைப் பொறுத்தமட்டில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி தகவல்களைப் பெறுவதில் ஆர்வம் காட்டுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவது தெளிவாகத் தெரிகிறது. அரச மற்றும் பகுதியளவான அரச நிறுவனங்களுக்கு முன்வைக்கப்பட்ட தகவல் கோரிக்கைகளை ஆராயுமிடத்து, மக்கள் தங்களது தனிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் மற்றும் பொதுவாக சமூக நலனை பாதிக்கும் விடயங்கள் குறித்து தகவல் கோரிக்கைகளை தாக்கல் செய்துள்ளமை தெளிவாகிறது.
கண்டி, ஹந்தானையைச் சூழவுள்ள உணர்திறனான சூழலியல் வலயத்திலுள்ள பெருந்தோட்ட அபிவிருத்திச் சபை மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை அரசியல் மற்றும் வேறு காரணங்களுக்காக ஆக்கிரமிக்கும் நடவடிக்கை பல ஆண்டுகளாக இடம்பெற்று வருகின்றது.
ஹந்தானை பாதுகாப்பு அமைப்பு உட்பட பல்வேறு சுற்றாடல் அமைப்புக்கள் இந்த காணி அபகரிப்பு தொடர்பில் தகவல்களை கோரிய போதிலும் அவை வெற்றியளிக்கவில்லை. இந் நிலையில், அவர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெறுவதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நாட வேண்டியிருந்தது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மக்கள் அளித்த தகவலுக்கான கோரிக்கைகளை மறுக்க முடியாத நிலையில், கேட்கப்பட்ட தகவல்கள் கிடைக்கப் பெற்றமையானது உண்மையில் மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.
இச்சட்டம் இரண்டு வழிகளில் சமூக நலனை உறுதிப்படுத்துகிறது. ஒன்று, சட்டத்தின் கீழ் பெறக்கூடியதாகவுள்ள அனைத்து தகவல்களையும் பெறுவதற்கான வாய்ப்பு. மற்றொன்று, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தகவல்களை மறைக்க வாய்ப்பில்லை என்பதால், உத்தியோகத்தர்கள் சட்டத்திற்குப் புறம்பாக நடப்பதற்கான வாய்ப்புகளை மட்டுப்படுத்துகிறது.
மகாவலி ஆற்றின் அகலமான மற்றும் குறுகலான இடங்களை உள்ளடக்கிய கன்னொருவ ஹக்கிந்த தீவுக்கூட்டம், ஹோர்டன் சமவெளியிலிருந்து திருகோணமலை வரையிலான மகாவலி ஆற்றின் 335 கிலோமீற்றர் நீளத்தில் உள்ள தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகும். இது சுமார் இருபது கவர்ச்சிகரமான தீவுகளைக் கொண்டுள்ளது. மிகவும் அழகான மற்றும் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாக இருப்பதால், ஹக்கிந்த ஈரநிலப் பகுதியானது மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் 2017 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் வரதென்ன – ஹக்கிந்த பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால், ஆற்றின் இருபுறமும் சட்டவிரோத கட்டுமானங்கள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பான தகவல்களைப் பெறுவதில் சிரமம் இருந்த போதிலும், சுற்றுச்சூழல் அமைப்புகளும், உள்ளுர் மக்களும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி தேவையான தகவல்களைப் பெற நடவடிக்கை எடுத்தனர்.
கண்டி மாவட்டத்தில் அதிகளவான தகவல் கோரிக்கைகளை கண்டி மனித உரிமைகள் அலுவலகம் தாக்கல் செய்துள்ளது. தகவல் கோரிக்கைகளை நேரடியாக சமர்ப்பிப்பது மட்டுமல்லாது, அநீதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் பெறுவதற்கு இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக வழிகாட்டி வருகிறது. இதன்பிரகாரம் சுமார் 200 நபர்கள் தகவல்களைப் பெற்று சட்ட நடவடிக்கை எடுத்ததுடன் காப்புறுதி இழப்பீடுகளையும் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளமை குறிப்பிட்டுக் கூற வேண்டியதாகும்.
கண்டி தேசிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த நபரின் மனைவி தனது கணவனின் மருத்துவ அறிக்கையை வைத்தியசாலை அதிகாரிகளிடம் கோரிய போதிலும், கணவனின் மரணம் சந்தேகத்திற்குரியது என விசாரணையில் தெரிவித்தமையால் மருத்துவ அறிக்கையை வழங்க மறுத்துள்ளனர். அந்த அறிக்கைகள் இன்றி கணவரின் காப்புறுதி இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் கண்டி மனித உரிமைகள் அலுவலகம் குறித்த பெண்ணுக்கு உதவியமை விசேட நிகழ்வாகும். தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தி கணவரின் மருத்துவ அறிக்கைகள் அனைத்தையும் பெற்றுக் கொண்ட அவர் தற்போது அறுவைச் சிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர் மீது வழக்கும் தொடர்ந்துள்ளார்.
கண்டியில் உள்ள பிரபல பாடசாலைகளுக்கு சிறுவர்களை அனுமதிப்பதில் இடம்பெற்ற சில முறைகேடுகளை பெற்றோர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி அம்பலப்படுத்தினர். அவர்கள் சட்டத்தைப் பயன்படுத்தி பெறப்பட்ட தகவல்களை சட்ட கட்டுப்பாடுகள் இன்றி ஊடகவியலாளர்களுக்கு வழங்குவதுடன், அவற்றை ஊடகங்களில் பிரசுரிப்பதற்கும் அனுமதிக்கின்றனர்.
கடந்த சில வருடங்களாக நெல்வயல் மீட்பு, மருத்துவமனை கழிவுகளை அகற்றும் முறைகள், இடமாற்றங்கள் மற்றும் பொதுச் சேவையில் பதவி உயர்வுகள், சட்டவிரோதமான கட்டுமானங்கள் மற்றும் பலவற்றைப் பற்றிய தகவல்களை அறிய மக்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு மேலதிகமாக, மாகாண மற்றும் பிராந்திய சுகாதார அலுவலகங்களுக்கு கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பில் அதிகளவான தகவல் கோரிக்கைகள் கிடைத்துள்ளதாக கண்டி மாவட்ட மற்றும் மாகாண சுகாதாரப் பிரிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
கண்டி மாவட்டத்தில் ஆரம்ப காலத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைவாக இருந்த போதிலும், காலப்போக்கில் மக்களின் ஆர்வம் அதிகரித்தது. ஆரம்ப கட்டங்களில் தகவல் அளிப்பதற்கு தகவல் உத்தியோகத்தர் இல்லாத நிறுவனங்களில் கூட தற்போது இதற்காக உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதிகமானோர் தகவல் கேட்டால், உத்தியோகத்தர்கள் அதற்குரிய வசதிகளை செய்து தர வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி தகவல்களை கோரும் போது சில நிறுவனங்கள் வேண்டுமென்றே தகவல்களை வழங்க மறுக்கின்றன. இருப்பினும், இது போன்ற சூழ்நிலைகளில் என்ன செய்ய முடியும் என்பதைத் துறைசார் நிபுணர்களிடமிருந்து அறிந்து கொள்வதில் மக்கள் இப்போது அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இதன் காரணமாக தகவல் கோரிக்கை மனுக்கள் கிடைக்கப் பெற்றவுடன், அது குறித்து கோரிக்கையை தாக்கல் செய்தவருக்கு உரிய காலப்பகுதியில் அறிவிப்பதற்கு அரச நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
இப் பின்னணியில், பொது மக்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் தமக்குத் தேவையான தகவல்களை அதிகம் கோருவதானது, சட்டத்தை அமுல்படுத்துவதற்கான அழுத்தத்தை வழங்குவதில் ஒரு முக்கிய காரணியாக விளங்குகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
Recent Comments