● கோட்டாபயவின் பிரத்தியேக பணியாளர்களுக்கு 11 வாகனங்கள்
● ரணிலின் பிரத்தியேக பணிக்குழாமிற்கு 68 வாகனங்கள்
ஜனக சுரங்க
வாகனங்களை பொதுவாக காட்சியறைகளில் வைத்தே பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவர். எனினும், புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், கடந்த அரசாங்கத்தின் அதிகாரிகள் பயன்படுத்திய சொகுசு வாகனங்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகிலுள்ள காலி முகத்திடலில் ஒன்றாக நிறுத்தப்பட்டமையானது, ஊடகங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய செய்திகளை உருவாக்கியுள்ளது. பெரும்பாலும், இந்த வாகனங்களை பணியாளர்களுக்கு வழங்கியதில் காணப்பட்ட வெளிப்படைத்தன்மை, அவை எந்த அடிப்படையில் வழங்கப்பட்டன மற்றும் ஒவ்வொன்றையும் பயன்படுத்தியவர்கள் குறித்த விபரங்களை அறிந்துகொள்ள பொது மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
காலி முகத்திடலில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி அலுவலகத்திடம் கோரப்பட்ட தகவல் கோரிக்கைக்கு கிடைத்த பதில்களின் அடிப்படையில், அந்த வாகனங்கள் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட பல சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அண்மையில் மக்களுக்கு அறிவித்தது. Defender மற்றும் Volvo ஜீப்கள், Chrysler, Mahindra, Discovery கார்கள், Rosa பஸ் ஆகியவை முதற்கட்டமாக ஏலத்தில் விடப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இரண்டாம் கட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக சமூகமும் இதில் கணிசமான ஆர்வம் காட்டியுள்ளது. அரசாங்கத்தின் நிதிச் செலவினங்களை நிர்வகிப்பதற்கும் பொறுப்புக்கூறுவதற்கும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், 7வது மற்றும் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளின் காலத்தில் ஜனாதிபதியின் தனிப்பட்ட பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்கள் தொடர்பான தரவுகளையும் ஆராய முடிந்தது.
7ஆவது ஜனாதிபதியை போலவா எட்டாவதும் அமைந்தது?
ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷ, தனது பிரத்தியேக பணியாளர்களுக்காக 11 விசேட ஜீப்கள், கெப்கள் மற்றும் கார்களை மட்டுமே வழங்கியிருந்தார். இதில் B.M.W, Nissan, Ford, SsangYong, KIA, Toyota, Mitsubishi மற்றும் Isuzu ஆகியவை அடங்கும். பிரத்தியேகச் செயலாளர், ஒருங்கிணைப்பாளர், தொடர்பாடல் அலுவலர், ஒருங்கிணைப்புச் செயலாளர் போன்ற பதவிகளை வகித்தவர்களுக்கு இந்த வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காக நாட்டை பொறுப்பேற்றுக்கொண்ட எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக பணியாளர்களாக 68 பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களில், விசேட செயற்திட்ட பணிப்பாளர்கள், பணிப்பாளர் நாயகங்கள், ஆலோசகர்கள் மற்றும் பல்வேறு செயலாளர்களின் பயன்பாட்டிற்காக, BMW, Toyota Land Cruiser, Ford Everest, Mitsubishi Montero, Land Rover Defender, Toyota Corolla, Nissan Sylphy, Toyota Yaris, Isuzu D Max, Mazda போன்ற சொகுசு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பிரத்தியேக பணியாளர்களில் பெரும்பாலானோர் அரசியல் ரீதியாக நியமனம் பெற்றவர்கள் ஆவர். நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த வேளையில், ஆட்சியாளர்கள் நாட்டின் பொது வரிப்பணத்தை சம்பளம், எரிபொருள் மற்றும் இதர சலுகைகளுக்கு செலவு செய்து மக்களின் சுமையை அதிகப்படுத்தியதை இந்த தரவுகள் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன.
தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தி இதுபோன்ற உண்மைகளை வெளிப்படுத்துவதன் மூலம் பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்களின் நிலைப்பாட்டை வலுப்படுத்த உதவும்.
Recent Comments