க.பிரசன்னா
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் நன்மை கருதி அரசாங்கத்தால் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சால் போசாக்கு கொடுப்பனவு வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. 2024.01.01 ஆம் திகதி முதல் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 10 மாதங்களுக்கு மொத்தமாக 45 ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது. அதற்கு முன்பாக 10 மாதங்களுக்கு மொத்தமாக 25 ஆயிரம் ரூபா வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்தது.
எனினும் 2022 – 2023 ஆம் ஆண்டுகளில் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களாக கொழும்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு நான்கு மாதங்களுக்கான கொடுப்பனவுகள் மாத்திரமே வழங்கப்பட்டமையும் இதற்காக நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள எவ்வித நடவடிக்கையும் அரசாங்கம் எடுக்கவில்லை என்பதையும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக அறிந்து கொள்ள முடிந்தது.
கடும் பொருளாதார நெருக்கடியில் தங்களுடைய வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதற்கு சிரமப்பட்ட மற்றும் உரிய போசாக்கு உணவுகளை பெற்றுக்கொள்ளமுடியாமல் இருந்த பல கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த உதவித்தொகை முக்கியத்துவமுடையதாக இருந்த போதும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் அவற்றை உரியமுறையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
இவ்விடயம் தொடர்பில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் கொழும்பு மாவட்ட செயலகம் ஆகியன வழங்கிய தகவல்களில் காணப்படும் முரண்பாடுகள் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் நிகழ்ச்சித்திட்டத்திலும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதை வெளிப்படுத்துகின்றது.
முன்னைய வருடங்களில் இருந்த பொருளாதார சிக்கல்களின் அடிப்படையில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மாதம் ஒன்றிற்கு 2500 ரூபா வீதம் 04 மாத காலத்திற்கு 10000 ரூபா தொகை வழங்கப்பட்டது. அக்காலப் பகுதியில் சிரமங்களுக்கு உள்ளான குடும்பங்களின் பொருட்டும் அவ்வாறு உதவிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் அவ்வேலைத் திட்டம் தொடர்ச்சியாக செயல்படுத்தப்படவில்லை என சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வேலைத் திட்டத்தின் பொருட்டு தனியான நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படவில்லை என்பதுடன் பிற தொகுதிகளுக்காகவும் இவ்வாறான நிதி உதவிகளின் பொருட்டு ஒதுக்கிய தொகையிலிருந்து கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் உதவித் தொகைகள் செலுத்தப்பட்டிருந்தது.
2022 ஆம் ஆண்டின் செம்டெம்பர், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய 04 மாதங்களில் மாத்திரம் இக்கொடுப்பனவு செலுத்தப்பட்டது. கொழும்பு மாவட்டத்தின் சகல விண்ணப்பதாரர்களுக்கும் 10000 ரூபா வீதம் 6599 பெயர்களையுடைய சகல விண்ணப்பதாரிகளுக்கும் 65,990,000 ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் முன் சிறார் அபிவிருத்தி தொடர்பான தேசிய செயலகத்தின் மூலம் பெயர் பட்டியல் எமக்கு வழங்கப்பட்டதுடன் அவர்கள் அப் பெயர்பட்டியலை பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளனர். அதன் பிரகாரம் முன்வைத்த பெயர்களை உடைய அனைவருக்கும் அக்கொடுப்பனவு வழங்கப்பட்டதாகவும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு வழங்கிய தகவல்களின் அடிப்படையில், கொழும்பு பிரதேச செயலகத்துக்கட்பட்ட 35 கிராமசேவகர் பிரிவுகளில் 2020 – 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 10,921 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 10 மாதங்களுக்கான போசாக்கு கொடுப்பனவும் 50 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 4 மாதங்களுக்கான போசாக்கு கொடுப்பனவும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2022 – 2023 காலப்பகுதியில் 25 கர்ப்பிணிப் பெண்கள் மாத்திரமே நான்கு மாங்களுக்கான கொடுப்பனவை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு போசாக்கு கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் 2020 – 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 35,683 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. எனினும் அவற்றில் பெரும்பாலான நிதி செலவிடப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில், 27,271 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதுடன், 8412 மில்லியன் ரூபா செலவு செய்யப்படவில்லை.
மேலும் கொழும்பு மாவட்டத்தில் 73,497 புதிய கர்ப்பிணிப் பெண்கள் போசாக்கு கொடுப்பனவு திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு போசாக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை. பிரதேச செயலகத்துக்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்காமை, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பதிவு செய்யாமை, நிரந்தர வதிவிடத்தை உறுதி செய்யாமை, 50 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்ப வருமானத்தை கொண்டுள்ளமை மற்றும் குடும்பத்தின் மாதாந்த வருமானத்தை விடவும் செலவு குறைவாக இருக்கின்றமை போன்ற காரணங்களால் பெரும்பாலானோருக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு பிரதேச செயலகம் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான மாதாந்த மேலதிக போசாக்கு கொடுப்பனவு 2500 ரூபா வழங்கும் திட்டம் 2022 ஆம் ஆண்டில் மாத்திரம் செயற்படுத்தப்பட்டது. இந்த திட்டமானது, அக்டோபர் மாதம் 2022 முதல் ஜனவரி மாதம் 2023 வரையிலான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு மார்ச் 2023 முதல் அதற்குரிய கொடுப்பனவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் இத்திட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவித்துள்ளது.
கொழும்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் இத்திட்டத்துக்காக 1118 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்ட போதும், 1057 பயனாளிகளுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதுடன் மத்திய கொழும்பு 1, மத்திய கொழும்பு 2 மற்றும் கொழும்பு வடக்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 55 பயனாளிகளுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை அல்லது அவர்கள் கொடுப்பனவை பெற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த மூன்று அரச நிறுவனங்களின் தகவல்களின் அடிப்படையில் போசாக்கு கொடுப்பனவுகள் தொடர்பான சந்தேகங்கள் எழுவதை தவிர்க்க முடியாதுள்ளது. பின்வரும் விடயங்களில் தகவல்களில் முரண்பாடுகள் காணப்படுகின்றன.
பயனாளிகளின் எண்ணிக்கை: கொழும்பு மாவட்டத்தில் 6599 பயனாளிகளுக்கு 2500 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டதாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் அறிவித்தாலும் மகளிர் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் மூலம் 25 பயனாளிகளுக்கு மாத்திரமே 2500 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிதி ஒதுக்கீடுகள்: 10000 ரூபா வீதம் 6599 பெயர்களையுடைய சகல விண்ணப்பதாரிகளுக்கும் 65,990,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் அறிவித்தாலும் அரசாங்கம் 2020 – 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 35,683 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில், 27,271 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதுடன், 8412 மில்லியன் ரூபா செலவு செய்யப்படவில்லை.
கொடுப்பனவு பெறாத கர்ப்பிணிகள்: கொழும்பு மாவட்டத்தில் 73,497 புதிய கர்ப்பிணிப் பெண்கள் போசாக்கு கொடுப்பனவு திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு போசாக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை.
கொழும்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் இத்திட்டத்துக்காக 1118 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்ட போதும், 1057 பயனாளிகளுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதுடன் மத்திய கொழும்பு 1, மத்திய கொழும்பு 2 மற்றும் கொழும்பு வடக்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 55 பயனாளிகளுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை.
இவ்வாறு பல்வேறு குறைபாடுகளுடன் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் நன்மை கருதி அரசாங்கத்தால் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சால் போசாக்கு கொடுப்பனவு வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றை ஒழுங்குபடுத்துவதற்கும் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு உரிய கொடுப்பனவானது, உரிய காலப்பகுதியில் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும்.
Recent Comments