உணவு, உடை, உறையுள் ஆகிய 3 அடிப்படை தேவைகளோடு சேர்த்து தொடர்பாடல், போக்குவரத்து என்பனவும் அத்தியாவசிய தேவைகளாக மாறியுள்ளன. எவ்வாறாயினும் அடிப்படை 3 தேவைகளும் எவ்வாறு எல்லோருக்கும் பொதுவாக, நியாயமாக இல்லையோ அதுபோன்று போக்குவரத்து மற்றும் தொடர்பாடலிலும் பல இடர்கள் இன்றளவும் காணப்படத்தான் செய்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுவான்கரையையும், படுவான்கரையையும் பிரிக்கும் வகையில் நீண்ட ஆறு ஊடறுத்துச்செல்கின்றது. இவ்வாற்றினைக் கடந்தே எழுவான்கரைக்கும், படுவான்கரைக்குமான தொடர்பினை ஏற்படுத்த முடியும். இதனை தொடர்புபடுத்தும் வகையில், பட்டிருப்பு, மண்முனை, வலையிறவு போன்ற பாலங்கள் அமைந்துள்ளன. அத்தோடு இவ்வாவியினை ஊடறுத்துச் செல்லும் வகையில் சில இடங்களில் இயந்திரப்படகுச்சேவையும் நடைபெற்றுவருகின்றது. இதன்மூலமாக மக்கள் தமது பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலீஸ் பிரிவிலுள்ள அம்பிளாந்துறை – குருக்கள்மடம் இயந்திரப்படகு சேவையில் ஏற்பட்ட இடையூறு காரணமாக மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தப் படகு சேவை நீண்டகாலமாக பழுதடைவதும் அவற்றை புனரமைத்து மீண்டும் சேவைக்கு ஈடுபடுத்தும் ஒரு நிலைமையே பல காலமாக அங்கு காணப்பட்டது.
குறித்தப்படகு பாதையில் செயற்படும் ஒரேயொரு இயந்திரப்படகானது 09.11.2020 திகதியன்று பாதிக்கப்பட்டிருந்தமையால் போக்குவரத்து செய்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுவருவதாக செய்தியறிக்கைகள் பலவும் வெளியாகின.
அம்பிளாந்துறை வாவி போக்குவரத்துக்கு பயன்படும் படகு பல வருடங்களுக்கு முன் வழங்கப்பட்டதாகவும், அதில் பல தடவைகள் திருத்தவேலைகள் செய்யப்பட்டும், மிகவும் மோசமான நிலையிலே காணப்படுவதாகவும் மக்கள் செய்திகளில் கவலை தெரிவித்தனர்.
![](http://rtisrilanka.lk/ta/wp-content/uploads/2021/03/Ambilanthurai-2.jpg)
குறித்த இயந்திர படகுச் சேவை சேதமடைந்துள்ளமையினால் அதன் நிலை குறித்து நாங்கள் தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்தி தகவல்களை அறிந்து கொண்டோம்.
பாதிப்படைந்திருந்த குருக்கள்மடம் – அம்பிளாந்துறை போக்குவரத்துப்பாதை தற்போது இயக்கப்பட்டு வருவதாகவும், குறித்த படகுப்பாதையானது திருத்தம் செய்யப்படவில்லை எனவும், நிலவிவந்த அதிக காற்று மற்றும் அசாதாரண காலநிலை காரணமாக அப்பாதையினுள் நீர் உட்புகுந்தமையினால் ஏற்பட்ட தாமதத்தினால் தடங்கல் நிலையேற்பட்டதாகவும், பின்னர் அது சரி செய்யப்பட்டு மீண்டும் சேவையிலீடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களம் தகவல் வழங்கியிருந்தது.
குருக்கள்மடம் – அம்பிளாந்துறை படகுப்பாதைச்சேவை இயக்கப்படாத குறித்த காலப்பகுதியில் பட்டிருப்பு பாலத்தினூடாகவும், மண்முனைப் பாலத்தினூடாகவும், மாற்று வழிப்பாதைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம் பதிலளித்திருந்தது.
மேலும் இந்த இயந்திரப்படகிற்கு பதிலாக நிரந்தர பாலம் அமைப்பதற்கான திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகும், நிரந்தர பாலம் அமைப்பதற்கான திட்டமொன்று கிழக்கு மாகாண பிரதம செயலாளருக்கு 26.04.2019 மற்றும் 03.09.2020 ஆகிய திகதிகளில் இரு தடவைகள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்திற்கான பெறுமதி ரூபாய் 1200 மில்லியன் எனவும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம் தகவல் அறியும் சட்டத்தினூடான எமது கோரிக்கைக்கு பதிலளித்திருந்தது.
திட்டங்கள் முன்னமொழியப்பட்டாலும், இதுவரை ஏதும் செயல்வடிவம் பெறவில்லை. எவ்வாறாயினும் பாதுகாப்பாக கரை சேரும் பயணம் இன்னமும் கனவாக காணப்படுகிறது அம்பிளாந்துறை மக்களுக்கு!
Recent Comments