News

ஆறு வருட செயற்பாடற்ற தன்மை: வலிந்து காணாமலாக்கப்பட்டமைக்கு எதிரான சட்டத்தை அமுல்படுத்துவதில் இலங்கையின் தோல்வி

By In

தனுஷ்க சில்வா

இலங்கை வலிந்து காணாமலாக்கப்படும் சம்பவங்களின் நீண்டகால மற்றும் துயரமான வரலாற்றைக் கொண்டுள்ளதுடன், 1980களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போர் மற்றும் 1988-89 காலகட்டத்தில் இரண்டாவது ஜேவிபி கிளர்ச்சியின் போதும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சம்பவங்கள் அதிகரித்ததுடன், போருக்குப் பிந்தைய காலத்திலும் இந்நிலை தொடர்ந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 1999 ஆம் ஆண்டளவில், உலகளவில் காணாமலாக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருந்ததுடன், பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் 12,000 க்கும் மேற்பட்ட நபர்கள் காணாமலாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. காணாமலாக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 60,000 முதல் 100,000 வரை இருக்கலாம் என்று 2017 ஆம் ஆண்டில் அம்னஸ்டி இன்டர்நேஷனல் மதிப்பிட்டுள்ளதுடன், இது பிரச்சினையின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது.

ஆயுதமேந்தியவர்களால் மக்கள் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு, ஒருவிதமான தடயமும் இல்லாமல் காணாமலாக்கப்பட்டு, குடும்பங்களை நிச்சயமற்ற வேதனையில் ஆழ்த்திய ஆயிரக்கணக்கான சம்பவங்களை பல ஆணைக்குழுக்கள் ஆவணப்படுத்தியுள்ளன. கவலையளிக்கும் விதமாக, நாடு முழுவதும் இந்தக் காணாமலாக்கப்படுதல்கள் தொடர்ந்து பதிவாகி வருவது, இலங்கையில் நிலவும் மனித உரிமை சவால்களை கோடிட்டுக் காட்டுகிறது.

வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்களுக்கு நம்பகரமான சட்டரீதியான பதில்களை வழங்குவதற்காக, நல்லாட்சி அரசாங்கம் 2018 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க வலிந்து காணாமலாக்கப்படுவதிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயச் சட்டத்தை நிறைவேற்றியது. இலங்கை பாராளுமன்றத்தால் 2018ம் ஆண்டு மார்ச் 7ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டமூலமானது வலிந்து காணாமலாக்கப்படுவதிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயத்திற்கு சட்ட விளைவை கொடுக்கின்றது. 

கோனபினுவல கபில குமார டி சில்வாவின் வலிந்து காணாமலாக்கப்படுதல் சம்பவம் மற்றும் அதைத் தொடர்ந்து அவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உரிமைகள் மீறப்பட்ட விடயம் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக இந்த கட்டுரையாளர்,  தகவல் அறியும் உரிமை (RTI) விண்ணப்பத்தை தாக்கல் செய்தார்.  

கபில குமார டி சில்வாவின் மரணத்தை தழுவி மீண்ட கதை

டி சில்வா 2024 மார்ச் 27 அன்று பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் (STF) கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவமானது வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஹொரொவபொத்தானவில் நடைபெற்றிருந்தது. காணாமலாக்கப்பட்ட அன்று மாலை, டி சில்வா, BFW 2096 என்ற பதிவு இலக்கத்தை கொண்ட தனது மோட்டார் சைக்கிளில் பாண் வாங்குவதற்காக வெளியே சென்றிருந்தார். கடத்தப்பட்ட நேரத்தில், அவர் ஒரு சரம் மற்றும் ஒரு டி-சேட் அணிந்திருந்தார். அவர் இருக்கும் இடத்தைக் கண்டறிவதற்கு பலமுறை முயற்சித்த போதிலும், அவரது நிலை அல்லது அவரை அழைத்துச் சென்றவர்களின் அடையாளம் குறித்து அவரது குடும்பத்தினருக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிச்சயமற்ற தன்மை மற்றும் பயத்தின் காலப்பகுதியானது 2024 ஏப்ரல் 20 வரை தொடர்ந்ததுடன், டி சில்வா எதிர்பாராத விதமாக தெற்கு மாகாணத்தில் உள்ள காலி மாவட்ட பிடிகல பொலிஸ் நிலையத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டார். 

மார்ச் 27, 2024 முதல் ஏப்ரல் 20, 2024 வரையிலான காலப்பகுதியில், டி சில்வாவை முற்றுமுழுதாக கண்டறிய முடியவில்லை. அவர் திடீரென காணாமலாக்கப்பட்டதும், அவரது இருப்பிடம் அல்லது நிலை குறித்த தகவல் இல்லாததும் குறிப்பாக 2018 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, வலிந்து காணாமலாக்கப்படுவதிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயச் சட்டத்தின் பிரிவு 3 இன் பிரகாரம் சட்டத்தினை கடுமையாக மீறுவதாகும். இந்தச் சட்டமானது வலிந்து காணாமலாக்கப்படுவதிலிருந்து தனிநபர்களை பாதுகாப்பதுடன், அத்தகைய சட்டவிரோத செயல்களிலிருந்து விடுபடுவதற்கான அவர்களின் உரிமையை உறுதி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரிடமிருந்து சட்ட தலையீட்டை நாடுதல்

யூன் 18, 2024 அன்று, எழுத்தாளர் டி சில்வா சார்பாக இந்தக் குற்றத்தின் தீவிரத்தன்மை மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட கணிசமான ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு ஆர்வமுள்ள சில நபர்களுடன் இணைந்து சட்டமா அதிபரிடம் (AG) ஒரு ஆவணத்தை ஒப்படைத்ததுடன், இதன் மூலம் நாங்கள் இந்த விடயத்தை அவசரமாக நிவர்த்தி செய்வதற்கு சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டது. இது இச்சட்டத்தின் கீழ் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான பொறுப்பு சட்டமா அதிபரிடம் உள்ளது என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிரகாரம், சட்டத்தை அமுல்படுத்துவதில் சட்டமா அதிபரின் அதிமுக்கியமான வகிபங்கு தண்டனையிலிருந்து விலக்களிப்பதற்கு எதிரான ஒரு தடையாக செயற்படுவதுடன் பாரபட்சமின்றிய, விரிவான முறையில் நீதி அடையப்படுவதை உறுதி செய்கிறது.  

முக்கியமான தகவல் அறியும் உரிமை கண்டறிவுகள்

இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்படுதலை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஏராளமான சட்ட மற்றும் குடியியல் நடவடிக்கைகள் இருந்தபோதிலும், ஓகஸ்ட் 17, 2024 அன்று தாக்கல் செய்யப்பட்ட சமீபத்திய தகவல் அறியும் உரிமை (RTI) விண்ணப்பம், சட்டமா அதிபர் (AG) திணைக்களத்தின் நடவடிக்கையின் வெளிப்படையான குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளது. RTI விண்ணப்பம், குறிப்பாக கபில குமார டி சில்வா காணாமலாக்கப்பட்டமைக்கு பொறுப்பானவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை குறித்த தகவல்களை கோரியது; இருப்பினும், இந்த சம்பவத்தில் எதுவிதமான வழக்கு கோப்பும் திறக்கப்படவில்லை, அல்லது எந்த விசாரணையும் ஆரம்பிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. மேலும் குறிப்பிடத்தக்க வகையில், 2018 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, வலிந்து காணாமலாக்கப்படுவதிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாய சட்டம் இயற்றப்பட்டு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு கூட தாக்கல் செய்யப்படவில்லை என்பதை RTI கண்டறிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்தச் சட்டத்தின் கீழாக அடையாளம் காணப்பட்ட வழக்கு நடவடிக்கைகள் அல்லது சந்தேக நபர்கள் இல்லாதது, இந்தச் சட்டத்தை செயற்படுத்தத் தவறியதை அப்பட்டமாக விளக்குவதுடன், காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலை இல்லாமல் ஆக்குவதுடன், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான இலங்கையின் உறுதிப்பாடு குறித்து முக்கியமான வினாக்களை எழுப்புகின்றது. 

News

10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!

ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில்  பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…

By In
News

போதையில் மூழ்கும் சமூகம்;  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…

By In
News

பூமியை நான்கு தடவைகள் சுற்றிவரும் அளவிற்கு இலங்கையை வானில் சுற்றியுள்ள மஹிந்த ராஜபக்ஷ

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி விமானப்படைத் தலைமையகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம்…

By In
News

ஜனாதிபதி அலுவலகத்தின் சொகுசு வாகனங்கள் ஏலத்திற்கு முன்னர் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம்!

● கோட்டாபயவின் பிரத்தியேக பணியாளர்களுக்கு 11 வாகனங்கள் ● ரணிலின் பிரத்தியேக பணிக்குழாமிற்கு 68 வாகனங்கள் ஜனக சுரங்க வாகனங்களை பொதுவாக காட்சியறைகளில் வைத்தே பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவர்….

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *