2019 சீனா, வூஹான் மாகாணத்தில் ஆரம்பமாகிய கொரோனா வைரஸ் தொற்று 2020 மார்ச் மாதம் இலங்கையிலும் தனது பயணத்தை ஆரம்பித்தது. எமது சுகாதார துறையினரின் அயராத உழைப்பினாலும் மக்களின் பாரிய ஒத்துழைப்பினாலும் அதன் முதலாவது பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. நாடு முடக்கப்பட்டு பாடசாலைகள், அலுவலகங்கள் மற்றும் மக்கள் அதிகளவில் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. சூரியன் மெதுமெதுவாக தனது கிளைகளை பரப்பி ஒளி வீசுவது போல் மெதுமெதுவாக மக்களும் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். வழமைபோல் அனைத்தும் செயற்பட ஆரம்பித்தன. பாடசாலைகள், அலுவலகங்கள் என அனைத்தும் தமது செயற்பாடுகளை ஆரம்பித்தன. ஆனால் சுகாதார நடைமுறைகள் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும் என்பது அரசின் கட்டளை. பாடசாலைகளும் பிரிவு பிரிவுகளாக ஆரம்பமாகின.
இவ்வாறு 4 அல்லது 5 மாதங்கள் மக்கள் தமது இயல்பு வாழ்க்கையை அனுபவித்தனர். மீண்டும் 2020 ஒக்டோபர் 4 ஆம் திகதி கொரோனா வைரஸ் தனது இரண்டாவது அலையை ஆரம்பித்தது. சுதந்திரமாக இயங்கிய மக்கள் மீண்டும் பகுதியளவில் முடக்கப்பட்டனர். மீண்டும் பாடசாலைகள் 2020 நவம்பர் 23 ஆம் திகதி சகல சுகாதார நடவடிக்கைளையும் பின்பற்றி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்தது.
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் திறக்கப்பட வேண்டுமாயின் பாடசாலைகள் அனைத்திலும் கை கழுவுவதற்கான வசதி, உடல் வெப்பநிலை பரிசோதிப்பதற்கான வசதி, கை சுத்திகரிப்பான், முகக் கவசங்கள் என்பன வழங்கப்பட வேண்டும். இவற்றிற்கு பாரிய தொகை நிதி ஒதுக்கப்பட வேண்டும். அனைத்து பாடசாலைகளிலும் நிதி வசதி காணப்படும் என்று கூற முடியாது. எனவே அந்தந்த மாகாணசபைகளிலுள்ள கல்வி அமைச்சுகளிற்கும், வலயக் கல்வி அலுவலகங்களிற்கும் எம்மால் தகவலறியும் கோரிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதுவரையில் கிடைக்கப்பெற்ற தகவல்களை அடிப்படையாக வைத்து இந்தக் கட்டுரை எம்மால் எழுதப்படுகின்றது. இக் கட்டுரையில் வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலகம் ஆகியவற்றின் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட 50 பாடசாலைகள் கடந்த 2020, நவம்பர் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள சுகாதார நடவடிக்கைகளை வழங்குவதற்காக ரூபா 559,300 செலவிடப்பட்டுள்ளது. பின்வரும் இணைப்புக்களான படம் 01 மற்றும் படம் 02 வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்டபட்ட பாடசாலைகளிற்கு நிதி பகிர்ந்தளிக்கப்பட்ட தொகையை காண்பிக்கின்றது.
படம் 01
படம் 02
வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் ஆரம்பப் பாடசாலைகள் தவிர்ந்த 31 பாடசாலைகள் கடந்த 2020, நவம்பர் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள சுகாதார நடவடிக்கைகளை வழங்குவதற்காக ரூபா 472,200 செலவிடப்பட்டுள்ளது. இதனை பின்வரும் இணைப்புக்களான படம் 3, 3.1 மற்றும் 3.2 வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்டபட்ட பாடசாலைகளிற்கு நிதி பகிர்ந்தளிக்கப்பட்ட தொகையை காண்பிக்கின்றது.
படம் 3
படம் 3.1
படம் 3.2
2021 ஜனவரி 11 ஆம் திகதி பாடசாலைகள் விடுமுறைக்கு பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் மாணவர்கள் இந்த சுகாதார நடைமுறைகளை பின்பற்றுகின்றனரா என்பதை கண்காணிப்பதும் அவர்களிற்கு அவற்றின் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்துவதும் சவாலான விடயங்களாகும்.
Recent Comments