கொவிட்-19 பெருந்தொற்று சுகாதார ரீதியாக மட்டுமல்லாது பொருளாதார ரீதியாகவும் மக்களை பல இன்னல்களுக்கு இட்டுச் சென்றுள்ளது. குறிப்பாக இலங்கையில் ஏற்பட்டுள்ள சடுதியான விலை அதிகரிப்புக்கள் மக்கள் மத்தியில் நாட்டின் அரசாங்கம் பற்றிய எதிர்மறையான கருத்துக்களை உருவாக்கியிருப்பதோடு, இந்த விலை அதிகரிப்பினை நாம் எவ்வாறு தாங்கிக் கொள்ளப்போகின்றோம்? எமது சம்பளம் அனைத்து செலவீனங்களையும் சமாளிக்க போதுமா? என்ற பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன் காரணமாக பலர் இலங்கையை விட்டு வெளிநாடுகளை நாடிச் செல்லவும் காரணமாகவுள்ளது. அத்தோடு கடவுச்சீட்டினை பெற்றுக் கொள்வதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதனையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது.
தற்போது உலகளாவிய ரீதியில் கொவிட்-19 தொற்றும் அதனை கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளும் பற்றிய பேச்சுகள் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இலங்கை அரசாங்கம் மில்லியன் கணக்கான தடுப்பூசிகளை பல நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்திருக்கின்றது.
அத்துடன், குறித்த நாடுகளில் தயாரான தடுப்பூசியினை பெற்றுக்கொண்டால் தான் நாம் எந்த நாட்டிற்கும் செல்லலாம் அல்லது பிரிதொரு நாட்டில் தயாரான தடுப்பூசியினை பெற்றுக் கொண்டால் நாம் எந்த நாட்டிற்கும் செல்ல முடியாது என்ற பல கருத்துக்கள் மக்கள் மத்தியில் பேசு பொருளாக காணப்படுகின்றது. இதனை உறுதி செய்வதற்காக நாம் வெளிவிவகார அமைச்சிற்கு தகவலறியும் கோரிக்கையொன்றினை சமர்ப்பித்திருந்தோம். அதற்கு அமைச்சும் பதிலளித்திருந்தது.
அதன்படி மாணவர் விசா அல்லது சுற்றுலா விசா இல் வெளிநாடு செல்ல இருப்போர் எந்த தடுப்பூசியினை பெற்றக்கொள்ள வேண்டும் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சு அநேகமான நாடுகள் தமது நாட்டிற்குள் நுழைவதற்காக தடுப்பூசியினை கோருவதில்லை. பல நாடுகள் உலக சுகாதார அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியினை அவசர பயன்பாட்டிற்காக அங்கீகரிக்கின்றன. இருப்பினும் குறிப்பிட்ட தடுப்பூசியினை பெற்றுக்கொண்டால் தான் தமது நாட்டிற்குள் பிரவேசிக்க முடியும் என்று கூறும் சில நாடுகளுக்கு செல்ல இருப்போர் தூதரகத்திடமிருந்து குறிப்பிடப்பட்ட தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள தேவையான ஆவணத்தினையும் உறுதிப்படுத்தப்பட்ட விமானசீட்டினையும் காண்பித்தால் அவர்கள் குறிப்பிட்ட தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தது.
அடுத்ததாக எம் மக்கள் மத்தியில் எழும் இன்னொரு கேள்வி வெளிநாடு செல்ல இருப்போர் கொவிட்-19 தடுப்பூசியினை பெற்றுக் கொள்வதற்காக கட்டணம் எதாவது செலுத்த வேண்டுமா என்பதாகும். அதனையும் நாம் வெளிவிவாகார அமைச்சிடம் RTI ஊடாக வினவினோம். தடுப்பூசியினைப் பெற கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை என்றும் அரச தடுப்பூசி திட்டத்தின் கீழ் பொதுமக்களிற்கு இலவசமாகவே தடுப்பூசி வழங்கப்படுகின்றது என்றும் தெரிவித்தது.
மேலும் வெளிநாடு செல்வோருக்கான தடுப்பூசி வழங்கும் திட்டம் சுகாதார அமைச்சினாலும் இலங்கை இராணுவத்தினராலும் மேற்கொள்ளப்படுகின்றது. தடுப்பூசியினை பெற விரும்புவர்கள் அவர்கள் வசிக்கும் சுகாதார அமைச்சு பிரிவிற்கோ அல்லது இராணுவத்தினரால் தடுப்பூசி வழங்கப்படும் நிலையத்திற்கோ சென்று தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தது. வெளிநாடு செல்வோரிற்கென தனியான தடுப்பூசி வழங்கும் மையங்கள் எங்காவது அமைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு அவ்வாறு விசேட தடுப்பூசி வழங்கும் மையங்கள் எதுவும் நிறுவப்படவில்லை என்றும் அனைத்து தடுப்பூசி வழங்கும் மையங்களும் வெளிநாட்டவர்கள் உட்பட இலங்கையர் அனைவரிற்காகவும் திறந்திருக்கும் என அமைச்சு தெரிவித்தது.
தற்போது தினமும் இலங்கை பூராகவும் கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் அரசாங்கத்தினால் பல இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாளாந்தம் தடுப்பூசி வழங்கும் இடங்கள் தொடர்பான விபரங்களை நாம் ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொள்ள முடியும். மேலும் அரசாங்கம் மக்கள் நலன் கருதி வெளியிட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றி கொவிட் தொற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
Recent Comments